Tuesday, December 28, 2021

குரு தரிசனம் - பாரதியார்.


 

மற்றொருநாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை

வளமுறவே கட்டியவன் முதுகின் மீது

கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்

கருணைமுனி சுமந்துகொண்டு என்னெதிரே வந்தான்.

சற்று நகை புரிந்தவன்பால் கேட்கலானேன் ;

'தம்பிரானே ! இந்தத் தகைமை என்னே ?

முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ ?

மூட்டை சுமந்திடுவ்து என்னே ? மொழிவாய்' என்றேன்.


புன்னகை பூத்த ஆரியனும் புகழுகின்றான் ;

'புறத்தே நான் சுமக்கின்றேன் ; அகத்துனுள்ளே,

இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ'

என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்

மன்னவயன் சொற்பொருளினை யான்கண்டு கொண்டேன்.


ஸாய்ராம்.


குரு தரிசனம் - பாரதியார் (உபதேசம்)


 பக்கத்து வீடிடிந்து  சுவர்கள் வீழ்ந்த

பாழ்மனை ஒன்றிருந்து அங்கே பரமயோகி

ஒக்கத்தன் அருள் விழியால் என்னை நோக்கி

ஒரு குட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி

அக்கணமே கிணற்றுள்ளே தன்விம்பங் காட்டி

'அறிதிகொலோ" எனக்கேட்டான் 'அறிந்தேன்' என்றேன்

மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான் யானும்

வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.


தேசிகன் கைகாட்டி எனக்குரைத்த செய்தி

செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்.

'வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி

மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்

தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே

தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்

பேசுவதில் பயனில்லை அனுபவத்தால்

பேரின்பம் எய்துவதே ஞானம்' என்றான்.


ஸாய்ராம்.



குரு தரிசனம் - பாரதியார்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி

அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா

என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்

இராஜராமையன் என்ற நாகைப் பார்ப்பான்

முன் தனது பிதா தமிழில் உபநிடத்தை

மொழிபெயர்த்து வைத்தனைத் திருத்தச் சொல்லி

என்தனை வேண்டிக்கொள்ள யான் சென்று அங்கண்

இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச் சாமி


அப்போது நான் குள்ளச் சாமி கையை

அன்புடனே பற்றியிது பேசலுற்றேன் ;

'அப்பனே தேசிகனே ஞானி என்பார்

அவனியிலே சிலர் நின்னைப் பித்தன் என்பார்

செப்புற நல்ல அஷ்டாங்க யோக வித்தை

சேர்ந்தவன் என்று உனைப் புகழ்வார் சிலர் என்முன்னே

ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்

உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே

                                                                            

யாவன் நீ ?  நினக்குள்ள திறமை யென்னே ?

யாதுணர்வாய் ? கந்தை சுற்றித் திரிவதென்னே ?

தேவனைப்போல் விழிப்பதென்னே ? சிறியாரோடும்

தெருவிலே நாய்களோடும் விளையாட்டென்னே !

பாவனையிற் புத்தரைப்போல் அலைவதென்னே !

பரமசிவம் போலுருவம் படைத்த தென்னே

ஆவலற்று நின்றதென்னே ! அறிந்த தெல்லாம்

ஆரியனே எனக்குணர்த்த வேண்டும்' என்றேன் !


பற்றிய கை திருகிய்ந்தக் குள்ளச் சாமி

பரிந்தோடப் பார்த்தான் : யான் விடவே யில்லை 

சுற்றுமுற்றும் பார்த்துபின் முறுவல் பூத்தான்

தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்

குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு

குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான் ;

மற்றவன்பின் யான் ஓடி விரைந்து சென்று

வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.


ஸாய்ராம்.





 

Sunday, December 26, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 209. பெயரை அதிர்ஷ்டமாக மாற்றிக் கொள்வதற்கு, சில 'Tips'


பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என, நினைப்பவர்களுக்கான ' Tips'...

1) அவரவர்கள் பிறந்த நட்சத்திரங்களின், நாம எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக... 'அஸ்வினி' - சு, சே, சோ, ல (ஆங்கிலத்தில்... S)

                                 ' பரணி' - லி, லு, லே, லோ  (ஆங்கிலத்தில்... L)

2) அவரவர்கள் பிறந்த குலத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பொதுவாக 'சைவம்' அல்லது 'வைணவம்' என்று பகுத்துக் கொள்ளலாம். இது, அவர்களின் 'குல தெய்வத்தை' அடிப்படையாகக் கொண்டது.

'சிவ குலத்தில்' பிறந்தவர்கள், விபூதி தரிப்பவர்களாகவும்... அவர்களது முன்னோர்களின் பெயர்கள், 'கனகசபாபதி... விநாயக மூர்த்தி...கார்த்திகேயன் போன்றவைகளாக இருக்கும். அதையொட்டி பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

'வைணவ குலத்தில்' பிறந்தவர்கள் 'திருநாமம்' தரிப்பவர்களாகவும், அவர்களது முன்னோர்களின் பெயர்கள், ரெங்கநாதன்... கிருஷ்ணமூர்த்தி... இராம கிருஷ்ணன் போன்றவைகளாக இருக்கும். அதையொட்டி பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

3) அவரவர்களின் ஜாதகத்தில், லக்னாதிபதிக்கு ஏற்ப, சாதகமான ஒரு கிரகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிரகத்தைக் குறிக்கக் கூடிய 'எண் கணித அதிர்ஷ்ட எண்ணை' தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 4) நாம் தேர்ந்தெடுத பெயரை, இந்த 'அதிர்ஷ்ட எண்ணின் கூட்டுத் தொகை' வருமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

6( இந்தப் பெயரை முதலில் பயன் படுத்தி... அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்... அதில் 'பூரண நம்பிக்கை' ஏற்பட்டவுடன், முறையாக மாற்றிக் கொண்டு, அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெண்களுக்கான பிரத்தியோக 'Tip' :

7) 'சிவ குலத்தில்' பிறந்த பெண், திருமணத்திற்குப் பிறகு, 'வைணவ குலத்திற்கும்... வைணவ குலத்தில் பிறந்த பெண் திருமணத்திற்குப் பின் சிவ குலத்திற்கும்... இட மாற்றம் பெறுவதாகத்தான், 'அனைத்து சாதீயக் கட்டமைப்புகளும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன'. 

இதை, அவரவர்களின் முன்னோர்களின் வாழ்க்கை அமைப்பைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கேட்ப பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

ஸாய்ராம்.


 



Saturday, December 25, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 208. 'எண் கணித நிபுணர்' பண்டிட் ஸேதுராமன்.


'இந்நாள் வரை உலகில் கேள்விப்படாத, அறியாத ஓர் விஷயத்தை ஆராயும் ஆவல் எனக்கு ஏற்பட்டதே காரணம்... நான்கு வருஷ பிரயாசையும், ஏராளமான பொருட்செலவும் என் ஆராய்ச்சியை ஓர் ஒப்பற்ற சாதனையாக்கின... உலகிலேயே முதன் முதலாவதாக இவ்வாராய்ச்சி தமிழ் நாட்டிலே முடிவடைந்தது, தமிழர் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய ஓர் பராசக்தியின் வரப்பிரசாதம்... இந்த எண்கள் சம்பந்தமான கலை நியதியை அளந்து காட்டும் நிச்சயமான கணக்கு.... இதில் பூரணமான நம்பிக்கையுடன் பழகி வருகின்றவர்களே அளவற்ற செல்வத்தையும், உன்னதமான நிலையையும், காரிய சித்தியையும் அடைந்துள்ளனர்.'

- பண்டிட் ஸேதுராமன். (ஆசிரியர் - அதிர்ஷ்ட விஞ்ஞானம் - 1954)

இவருக்கு முன்னும்... பின்னும்... இந்த 'எண் கணித சாஸ்த்திரத்தை' எண்ணற்ற அறிஞர்கள் ஆய்ந்து, அறிந்து கையாண்டிருக்கிறார்கள். ஆனால் பண்டிட் அவர்களின் ஆய்வுக்கும், ஏனையோர்களின் ஆய்வுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுதான்.

அது, 'ஜோதிடக் கலையையும்'... 'கை ரேகை சாஸ்த்திரத்தையும்' நன்கு கற்றுத் தேர்ந்தவரான பண்டிட், இந்த எண் கணித சாஸ்த்திரத்தை, 'ஜோதிடக் கலையின்' வாயிலாக கையாண்டிருப்பதுதான்.

~ 1 முதல் 9 வரையிலான எண்களை 'கிரகங்களின்' ஆளுமைக்குக் கொண்டு வந்ததும்... 
~ ஆங்கில எழுத்துக்களை, அவற்றின் 'உச்சரிப்பு அலைவரிசைகளுக்கு' ஏற்ப, 'எண்களின்' ஆளுமைக்குள் கொண்டு வந்ததும்...
~ பிறந்த தேதியின் எண்ணை... 'பிறவி எண்ணாகவும்'...
~ பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் எண்ணை 'விதி எண்ணாகவும்'...
~ பெயரின் ஆங்கில எழுத்துக்களைக் கூட்டி வரும் எண்ணை... 'அதிர்ஷ்ட எண்ணாகவும்'...
~ அதிர்ஷ்ட எண்ணை தீர்மானிக்கும் போது, 'ஜோதிடக் கலையின்' வழியாக, பிறவி எண் அல்லது விதி எண்ணின் 'திரிகோணங்களைக்' குறிக்கும் கிரகங்களின் எண்களின் வழியாகக் கையாள்வதும், மிகவும் பிரத்தியோகமானது. இது ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நுட்பங்கள் அனைத்தையும், இவரின் புத்தகத்தை முழுமையாப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

இந்த நூற்றாண்டின் 'ஜோதிட நிபுணர்களின்' வரிசையில், இவர் ஒரு முக்கிய மான இடத்தைப் பிடித்திருக்கிறார்... என்பதை பெருமையுடன் குறிப்பிடலாம்.

ஸாய்ராம்.




 
 

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 207. திரு. A. M. ராஜகோபாலன் அவர்கள்.


திரு. ஏ. எம். ராஜகோபாலன் அவர்கள், 'தினமணி' மற்றும் 'குமுதம் ஜோதிடம்' போன்ற பத்திரிக்கைகளின் வழியாக, இலவச ஜோதிடப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். ஜோதிடப் பணியுடன் இணைந்து, ஆன்மீகத்தையும், தேசப் பற்றையும் வளர்த்த உத்தமர் என்றால் மிகையாகாது.
 
அவரது ஆழ்ந்த ஜோதிட ஞானமும்... ஒரு ஜாதகத்தை முறையாக ஆய்வு செய்து, அவர் அளிக்கும் அறிவுரைகளும்... புரதான நூல்களிலிருந்து அவர் எடுத்துக் காட்டும் உவமைகளும், பரிகாரங்களும்... எண்ணற்றவர்களுக்கு வழி காட்டுதலாகவும், நிவாரணமாகவும் அமைந்திருக்கின்றன.

அவரது ஆன்மீக வழியிலான எளிய பரிகாரங்கள், வாசகர்களை எண்ணற்ற புரதான ஆலயங்களின் தரிசனங்களுக்கு வழி காட்டியது. அதனால், அந்தப் புரதான ஆலயங்களைப் பற்றி வாசகர்கள் அறிந்து கொண்டதுடன், அந்த ஆலயங்களின் புனரு ஸ்தானங்களுக்கும் வழிகாட்டி, தமிழகத்தின் எண்ணற்ற ஆலயங்கள் புத்தொளி பெருவதற்கு வழிவகுத்தன.

அவரது கட்டுரைகள், நமது தேசத்தின் வரலாற்றை, இளஞர்கள் உட்பட அனைவரும் அறிந்து கொள்வதற்கும்... நமது நாடு இருந்த செழிப்பான பொற்காலத்தையும்... படையெடுப்புகளால் நாம் இழந்த செல்வம், ஆன்மீகம், கலாச்சாரம் போன்ற இருண்ட காலத்தையும்... அவற்றையெல்லாம் கடந்து, நாம் அடையப் போகும் பெருமை மிகு மேன்மையையும்... நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டின.

அவரது இடைவிடா சேவைக்கு இறைவனும்... சத்குருவும் அளித்த அனுபவங்களை அவரே பகிர்ந்திருக்கிறார். 

அவரது 'திருக்கைலாய யாத்திரையின்' போது, ஒரு பனிப்புயலில் சிக்கிய அவரது குழுவினருக்கு, ஒரு வேடன் வழிகாட்டி தனது குடிசைக்கு அழைத்துச் சென்றதையும், அங்கிருந்த அவனது மனைவியும், இரு ஆண் குழந்தைகளும், அவர்களுக்கு உணவளித்து, கம்பளிகள் கொடுத்து உதவியதையும்... அடுத்த நாள் அந்த வேடனின் வழிகாட்டுதலுடன் யாத்திரையை பூர்த்தி செய்ததையும்... விடுதிக்கு வந்து சேர்ந்த போதுதான், அவர்கள் சுட்டிக் காட்டியபடி அவ்வாறு ஒரு இடமோ, மனிதர்களின் இருப்போ, அங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று, வாழிகாட்டிகள் கூறியதையும்... அப்படியென்றால், அவர்கள் அனுபவித்தது, 'திருக்கைலாய நாதர்களின் குடும்ப தரிசனம்தான்' என்பதை அவர்கள் உணர்ந்ததையும்... மயிர் கூச்செரிய அவர் விவரித்திருப்பார்.

அவரது 'மந்த்ராலய தரிசனத்தின்' போது, துங்கபத்ராவைக் கடக்க அவர் தனது மனைவி, குழந்தைகளுடன், ரயில் பாலத்தில் நடந்து செல்லும் போது, எதிர்பாராத விதமாக எதிரே வேகமாக ரயில் வருவதையும்... பாலத்தில் அமைந்திருந்த ஒதுங்கும் பகுதி தொலைவில் இருந்ததையும்... அதை அடையும் முன்பே ரயில் வந்து விடும் என்பதை உணர்ந்து பதைப் பதைத்து, 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரைத்' துதித்ததையும்... எங்கிருந்தோ ஒரு சக்தி வந்து அவர்கள் அனைவரையும் இழுத்து, அந்த ஒதுங்கும் பகுதியில் சேர்த்த அற்புதத்தை, 'திரு.அம்மன் சத்யநாதன், அவர்கள், தனது 'ராகவேந்திரர் மகிமை' என்ற புத்தகத் தொகுப்பில், அற்புதமாக விவரித்திருப்பார்.

இந்த நூற்றாண்டின் ஜோதிட நிபுணர்களின் வரிசையில் இவர், ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதை பெருமையுடன் குறிப்பிடலாம்.

ஸாய்ராம்.
    

Friday, December 24, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 206. 'வித்வான் வே. லெட்சுமணன்'


'வித்வான்' என்று அழைக்கப்படும், 'திரு. வே. லெட்சுமணன்' அவர்கள் 'ஜோதிடக் கலையில்' வல்லுனர் மட்டுமல்ல... 'திரைத்துறையிலும்' தனது பங்களிப்பை அளித்தவர்.

'திரு. எம்.ஜி.ஆர்' அவர்களுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த இவர், அவருக்கு 'ஆலோசகராக'  இருந்தது மட்டுமல்ல... அவருடைய திரைப் பயணத்திலும் பங்கு கொண்டிருந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை மேற்பார்வை செய்யும் மூவர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.

எம்.ஜீ.ஆர் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னரே, பல திரப்படங்களுக்கு கதை, வசனம், பாடல், தயாரிப்பு... என, எண்ணற்ற பங்களிப்பை அளித்திருக்கிறார். அவர் எழுதிய, 

'நீயும் பொம்மை... நானும் பொம்மை...

நெனச்சு பாத்தா... எல்லாம் பொம்மை

தாயின் மடியில்... பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே... தொண்டனும் பொம்மை...' 

...என்ற பாடல் மிகவும் பிரபலமானது மட்டுமல்ல... திரு. ஜேசுதாஸ் அவர்களின் முதல் பாடலும் அதுதான்..

'ஜோதிடத் துறையில்' இவரின் பங்களிப்பு, தமிழ் நாட்டையும் கடந்து, தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என... நாடு கடந்த அளவில் இருந்தது. இவரின் நிபுணத்துவத்தை, இவர் எழுதி, மாதம் இருமுறை வெளிவந்த 'பால ஜோதிடம்' இதழ் வெளிப்படுத்தியது.

அந்த இதழில் அவர் எழுதிய, கிரகங்களைப் பற்றிய மிக விரிவான ஜோதிடக் குறிப்புகள்... ஜோதிட விதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை வெளிப்படுத்த, அவர் கையாளும் யுக்திகள்... உதாரணமாக எடுத்துக் காட்டும் பிரபலங்களின் ஜாதக ஆய்வுக் கட்டுரைகள்... கேள்வி-பதில் பகுதி... என, எண்ணற்ற ஜோதிட அறிவுக் களஞ்சியங்கள் நிரம்பியதாக... 'பால ஜோதிடம் இதழ் திகழ்ந்தது.

கேள்வி பதில் பகுதியில், கேள்விகளை மட்டும் பார்த்து விட்டு, அதற்கான பதில்களை நாங்கள் எழுதி, பின்னர் 'வித்வானின்' பதில்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்கள் ஜோதிட அறிவை வளர்த்துக் கொண்டோம், என்றால் மிகையில்லை.

இவை அனைத்தையும் கடந்து, மகான்கள், ஞானிகளின் ஜாதகங்களைப் பற்றிய இவரின் ஆய்வுகளும்... அவர்களின் ஜாதகத்தில், 'குரு பகவானின்' அமைவை, அவர் சிலாகித்து அனுபவித்தையும் கொண்டு, அவரின் 'ஆன்மீக ஞானத்தை' அறிந்து கொள்ளலாம். ஒரு ஜாதகத்தை எவ்வாறு அணுக வேண்டும்... என அவர் அளித்திருக்கும் குறிப்புகள்... ஜோதிடர்களுக்கு மட்டுமல்ல, ஜோதிட ஆர்வலர்களுக்கும், பேருதவியாக இருக்கும்.

திருவெண்காடர் உறைந்திருக்கும், ஆலயத்தில் இவர் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு பெரியவர், இவருக்கு அளித்த 'ருத்ராக்ஷ மாலையும்'... 'பிருகு மகிரிஷிகள்' அருளிய ஜோதிடப் புத்தகமும்... ஆலயத்தின் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும், 'புத பகவானின்' அனுக்கிரகமும்... இவரை ஜோதிடத் துறையில் பெருமை சேர்க்க வைத்ததை... அவர் தனது இதழில் குறிப்பிட்டிருந்ததும் நினைவு கூறத்தக்கது.

இந்த நூற்றாண்டின் 'ஜோதிட நிபுணர்களில்' இவரும் ஒருவராகத் திகழ்ந்தார். அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம்.

ஸாய்ராம்.


Wednesday, December 22, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'காமன் கூத்து'


 

'ரதியே ! ரதிக் கிளியே !

ரதிக்கேற்ற மன்மதனே !

மாசில் பிறை தேடி...

மாலையிட்டுக்  கோலமிட்டு..

அடித்துத் துரத்திடுவார், ஆனந்தப் பிள்ளையரே...!'

இந்தத் தெருக்கூத்து பாடலின் சப்தம், குழந்தைகளான எங்கள் அனைவரையும், வீட்டு வாசலுக்கே, இழுத்து வந்து விடும். 

அந்தக் கூத்தில், மன்மதனாகவும்... ரதி தேவியாகவும்.. வேஷமிட்டவர்கள், பாடும் பாடலையும், கதைப் பின்னனியையும், தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், கூத்தின் நடுவே கோமாளியாட்டம் போடுபவரின் சாட்டையடிக்குப் பயந்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக் கூட நண்பர்கள் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லக் கேட்கும் போது, அதை எப்போதாவது நேரில் சென்று பார்த்து விடத் தோன்றும். 

சிவபெருமானாரின் தவத்தைக் களைகப்பதற்காக...  மன்மதன் மலர்க் கணைகளைத் தொடுப்பதும்... தவத்திற்கு இடையூறு ஏற்பட்டதால்... பெருமானாரின் நெற்றிக் கண் திறந்து, அந்தக் கனலினால் மன்மதன் எரிந்து சாம்பலாகிப் போவதையும்... ரதி தேவியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கிய சர்வேள்வரனின் அருளினால், மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுவதையும்... நண்பர்கள் சொல்லும் போது, அந்தக் காட்சிகளிலேயே மனம் மூழ்கிப் போகும்.

மன்மதனாக வேடமிட்டிருப்பவர், தணலில் எரிந்து சாம்பலாகும் காட்சியில் மயங்கிய நிலையில் விரைத்துப் போவதும்... மூன்று நாட்களும் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதே நிலையில் இருந்து விட்டு, மூன்றாம் நாளின் இறுதியில் கண் விழிப்பதையும் கூறும் போது, அதை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்று, மனம் ஏங்கியிருக்கிறது.

இன்றும், மாசி மாதம் வரும் போதெல்லாம்... அந்தப் பாடல் வரிகள்தான் மனதில் வந்து போகிறது... 'ரதியே ! ரதிக் கிளியே !!...'

ஸாய்ராம்.






'நானே, சத்தியமுமாய்... ஜீவனுமாய்... வழியுமாய்... இருக்கிறேன் !'


 
'இறைவனின் கருணையினால், எப்போதும் நமக்காக ஒரு வழி திறந்தே இருக்கிறது. இது, நன்றியுடன் நாம் நினைத்துப் பார்க்கக் கூடிய அழகிய உண்மை. அந்த வழியை நோக்கிய பயணம், சுலபமாக இல்லாமல் இருக்கலாம்... வசதியாக இல்லாமல் இருக்கலாம்... உடனே கைகூடி விடாததாகக் கூட இருக்கலாம். திசைகள் நான்கு புறமும், கடும் துன்பங்களால் சூழப்பட்டும் இருக்கலாம் ஆனால் நாம், இந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்தால்... இறுதியில், அந்த வழியை அடைந்து விடலாம். அவ்வாறான ஒரு வழி இல்லாமல் இருப்பது போலத் தோன்றினாலும்...அவரே வழியாகி, நம்மைக் கொண்டு போய், அங்கு சேர்த்து விடுவார் !'

- ஜாய்ஸ் மேயர்.

ஸாய்ராம்.

Tuesday, December 21, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'பூச்சாண்டி'


பூச்சாண்டிக்கிட்ட, புடிச்சுக் குடுத்திருவேன் !

இதைச் சொல்லாத அம்மாக்கள், எங்கள் காலத்தில் இருந்திருக்கவே முடியாது. அவர்களின் சொல்படி நடக்க விட்டால்... இதைச் சொல்லித்தான் பயமுறுத்துவார்கள். எனக்கும் அதே பயமுறுத்தல் இருந்தது.

எனக்கு அம்மா காட்டிய பூச்சாண்டியோ, உண்மையாக நடமாடிக் கொண்டிருந்தது. சராசரி உயரம்...முறுக்கி விடப்பட்ட நரைத்த மீசை... முழங்கால் வரையிலான வேட்டி... குளிருக்கு அணியும் கோட்டு... அழுக்குத் தலைப்பாகை... தோளில் முடிச்சுப் போட்டிருந்த ஒரு மூட்டை.. வாயில் புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு... என, குழந்தைகளைக் கண்டவுடன்... ஹா ! ஹா !! என்று சிரித்தபடி ஓடி வரும்.

குழந்தைகளான நாங்கள் அனைவரும், அதைக் கண்டதும் ஓடி மறைந்து கொள்வோம். அந்த மூட்டைக்குள், அது பிடித்து வைத்திருக்கும் குழந்தைகள் இருப்பதாகப் பேசிக் கொள்வோம். அது எங்களைக் கடந்து போகும் போது, பூச்சாண்டி... பூச்சாண்டி... என்று கூவிக் கொண்டு விரட்டிச் செல்வோம். அது உடனே திரும்பி எங்களை துரத்தி வரும் போது, அதனிடம் சிக்கி விடாமல் ஓடி வந்து, வீட்டுக்குள் மறைந்து கொள்வோம்.

ஒருநாள், வீட்டிலிருந்து எனது சகோதரர்கள் வியாபாரம் செய்யும் மற்றொரு கடை வீதிக்கு, தேநீர் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு மலைக்கும், ஒரு பள்ளத்தாக்குக்கும் இடையேயான வளைந்து செல்லும் பாதை. அந்தப் பாதையின் நடுவில், எனது வீடும்... நான் செல்ல வேண்டிய கடை வீதியும்... பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்.

அந்த ஆள் அரவமற்ற இடத்தைக் கடப்பது, எப்போதும் எனக்கு மிகவும் பயமானதாகவே இருக்கும். அதுபோலத்தான் அன்றும்... எனது பயத்திற்கு ஏற்ப, அந்த பூச்சாண்டி தொலைவில் வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் எனது மூச்சே நின்று விட்டதைப் போல இருந்தது. கால்கள் பின்னிக் கொண்டன. திரும்பி புறப்பட்ட இடத்திற்கு போக முடியாமலும்... அதைக் கடந்து போக முடியாமலும்... தவித்து நின்ற வேளையில், அந்த பூச்சாண்டி என்னை நோக்கி நெருங்கி வந்தது,

வாயிலிருந்த  சுருட்டைஎடுத்து விட்டு, குனிந்து, மெல்ல சிரித்து, 'என்ன சின்ன ராசா ! கடைக்கு டீ கொண்டு போறீயா ?' என்ற அந்த அன்பான குரலைக் கேட்டவுடன்தான்.. அந்தக் குரலுக்குப் பின்னாலிருந்த, ஒரு தாத்தாவை என்னால் பார்க்க முடிந்தது. நான் பயந்து கொண்டே, 'அந்த மூட்டைக்குள் என்ன இருக்கிறது ?' என்று கேட்ட போது, அவர் அதைத் திறந்து காண்பித்தார்... அதில் அன்று பறிக்கப்பட்ட கீரைகளும்.. கிழங்குகளும் இருந்தன..

அடுத்த சில நாட்களில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த தாத்தா வந்து கொண்டிருந்தார்... பிள்ளைகள் எல்லோரும் பூச்சாண்டி... பூச்சாண்டி... என்று அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவரும் வழக்கம் போல, திரும்பி வந்து, அனைவரையும் விரட்ட... எல்லாக் குழந்தைகளும் ஓடி மறைந்தன... நான் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன்... என்னை மறந்து !

ஸாய்ராம்.






Monday, December 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 205. இந்தப் பிறவி... புதிரா (தோஷம்) ? புனிதமா (யோகம்) ?



'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ...'

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும், அவை அவைகளுக்கென தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மறைகின்றன. அந்தத் தீர்மானங்களுக்கு ஆதாரமாக, அவற்றின் செயல்கள் அமைந்து விடுகின்றன. அந்தந்த செயல்கள் 'விளைவிக்கும் விளைவுகளுக்கு' ஏற்பவே, அவற்றின் 'தொடர் பிறப்புகளும்' நிகழ்கின்றன. இதைத்தான் 'கர்ம வினைகளின் சுழற்சி' என்று அழைக்கிறோம்.

இந்தக் கர்ம வினைகளுக்கு ஏற்பவே பிறவிகள் அமைகின்றன. இதைத்தான் ஒரு 'புதிர்' (தோஷம்) என்று அழைக்கிறோம். இந்தப் பிறவியை மேற்கொள்ளும் உயிரினம், அதன் 'கர்ம வினைகளின்' விளைவுகளை அனுபவிப்பதற்கு ஏற்ப..., ஏற்கனவே அமைந்திருக்கிற ஒரு சூழலின் மத்தியில்... ஒரு பிறவியை அடைகிறது.

அது, ஒரு Puzzle ஐப் போல... ஏற்கனவே முழுமையாக அமைந்து, அதன் ஒரு பகுதியை மட்டும் இழந்திருக்கிற, அந்தப் Puzzle ன், காலியிடத்தை நிரப்புவதற்காக, நமது கர்ம வினைகளுக்கு ஏற்ற, ஒரு குடும்ப சூழலில், இந்தப் பிறவி அமைந்து விடுகிறது.
 
இதில், மானிடப் பிறப்புக்கு மட்டும் ஒரு விசே வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. அது, 'இந்தப் பிறவியில் தாம் எதிர் கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான முடிவுகளை தாமே எடுக்கும் வாய்ப்பு'. இந்த அரிய வாய்ப்பு ஏனைய எந்த உயிரினத்திற்கும் வழங்கப்படவில்லை.

இந்த அரிய வாய்ப்பைத்தான் 'புனிதம்' (யோகம்) என்று அழைக்கிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம் மேற்கொள்ளும் அல்லது எதிர் கொள்ளும் செய்ல்களை 'பற்றற்று அணுகி', அவை விளைவிக்கும் பலன்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு, நமது செயல்களை எதிர்கொண்டு, நமது கர்ம வினைகளைக் களைந்து, பிறவிகளின் தளைகளிலிருந்து விடுபடுவதற்கான யுக்திகளை அளிப்பதுதான், 'ஜோதிடக் கலை' என்ற 'வேதத்தின் அங்கம்'. 

இந்தக் கலையளிக்கும் முன்னறிவுப்புகளை ஏற்றுக் கொண்டு, அதன் வழியே பயணிக்கும் போது, 'புதிராக' (தோஷம்) இருந்த நமது வாழ்வு 'புனிதமாக' (யோகம்) மாறி விடுகிறது. ஆம், 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'.

ஸாய்ராம்.


Saturday, December 18, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 204. 'நுட்பங்களின் நாயகன் கேது பகவான்'


நாம் காணும் நுட்பங்கள் அனைத்திற்கும் பின்புலமாக, 'கேது பகவானின்' அமைவு இருப்பதை, ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரகங்களின் அமைவுகள் வழியாக ஆய்ந்தறியலாம். உலக வாழ்வில் மட்டுமல்ல... உள் வாழ்வான ஆன்மீக வாழ்விலும்... இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

உதாரணமாக, மருத்துவத் துறைக்கு அடித்தளமாகவே 'கேது பகவான்' அமைகிறார். அது சித்த மருத்துவமானாலும்... ஆயுர்வேதம், அலோபதி என்ற ஆங்கில மருத்துவமானாலும்... அதைக் கற்றுத் தேர்பவர்களின் ஜாதகத்தில் இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுவதைக் காணமுடியும்.

ஆரம்பக் கல்வியை வெளிப்படுத்தும் 2 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... உயர் கல்வியை வெளிப்படுத்தும் 4 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... ஜீவனத்தைக் குறிப்பிடும் 10 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... 'கேது பகவான்' ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் 'புகைப் படக் கலைஞர்களின்' ஜாதகங்களில், லக்னத்துடனோ... லக்னாதிபதியுடனோ... 'கலைகளை' வெளிப்படுத்தும் 3 ஆம் பாவம் அல்லது பாவாதிபதியுடனோ... இவர் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

அது போலவே, உள் வாழ்வான ஆன்மீக வாழ்வின் உயர் நிலைப் பாதையைச் சுட்டிக் காட்டும் நிலையில் இவரின் அமைவு அமைந்திருக்கும். எந்தக் கிரகங்களின் இணைவுமின்றி, தனித்து, கால புருஷ இராசியின், சுக பாவமான 4 ஆம் பாவத்தில் (கடக இராசி) 'கேது பகவான்' அமரும் போது, உள் வாழ்வான ஞான வாழ்வின் உச்சத்தை அடைவதற்கான வழி பிறப்பதை, அனுபவத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஸாய்ராம்.


 




Friday, December 17, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'அண்ணார் திரு. ராஜ்மோகன் அவர்களது நினைவு நாள் பதிவு (20.12.2021)


 'சதா நேரமும் இறைவனுடனேயே ஒன்றியிருக்கும் ஒரு சத்குருநாதனரின் திருவடிகளில், நம்மைக் கொண்டு சேர்க்கும் ஒரு உறவுதான்... உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு' - ஹேமாட் பந்த். 'ஸ்ரீ ஸாயீ ஸத் சரித்திரம்'. 

அவ்வாறு என்னை, சீரடி மஹானின் திருவடிகளில் கொண்டு சேர்த்த (1999), அண்ணார் திரு. ராஜ்மோகன் அவர்களின் தொடர்பைத்தான், நான் அடைந்த உறவுகளிலே மிக உயர்ந்த உறவாகக் கருதுகிறேன்.

அண்ணாரும் அடியேனும் 1994 லிருந்து ஆன்மீகம் மற்றும் ஜோதிடத் துறையில் பயணித்துக் கொண்டிருந்த சூழலில், எங்களது முக்கியத் தேடல்... ஒரு குருவை அடைவதாக இருந்தது. தென் தமிழகத்து பெரும்பான்மையான ஆலயங்களின் வழியான தேடல், திருவண்ணாமலையில் நிலைத்து நின்றது.

எண்ணற்ற திருவண்ணாமலைப் பயணத்தில், சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகிரிஷிகள், யோகி ராம்சுரத்குமார்... என்ற தேடல், இறுதியாக பகவான் சீரடி மஹானின் திருவடிகளில் நிலைத்தது.

பாபாவின் தொடர் திருவிளையாடல்கள், அவரைப் பற்றி ஏதுமறியாத அண்ணாரை, எங்களது ஊரிலேயே எழுந்தருளிய (1998 - முடிகண்டம், திருச்சி) பாபாவின் திருவடிகளில் கொண்டு சேர்ந்தது. அந்த ஆனந்த அனுபவத்தை அடைந்த அண்ணார், அடியேனையும் அடுத்த சில வாரங்களில், அங்கு அழைத்துச் சென்றார். அவர் முதலில் அழைத்துச் சென்றது, அந்த ஆலயத்தில், பாபா சீரடியில் வசித்து வந்த மசூதியைப் போன்றே அமைந்திருந்த 'துவாரகமாயிக்குத்தான்'. 

அதன் படிகளில் ஏறி, வலது பக்கம் அமைந்திருந்த, கிராதிக்கு உள் அமைந்திருக்கும் 'உயிரோவியமான' பாபாவின் கருணை நிறைந்த... ஆழ்ந்து உள் நோக்கும் கண்களின் ஆகர்ஷணத்தில் மூழ்கிய படியே... அவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி... அவரின் பாதங்களிலேயே சரணாகதி அடைந்து விட்டேன்.

அண்ணாரது வாழ் நாட்களிலும், அடியேனது வாழ்விலும் எண்ணற்ற அனுபவங்களை அளித்து, எங்களை வழி நடத்தும் பாபாவின் கருணை, அண்ணாரது குடும்பத்திற்கும், அடியேனுக்கும் நிலை பெற்று நின்றிட, நான் அடைந்திட்ட உறவுகளிலேயே, மிக உயர்ந்த உயர்வான  அண்ணாரின் ஆசிகளை வேண்டிப் பணிகிறேன்.

'எல்லை என்றில்லாமல் எங்கும் நிறைபவனே

இல்லை எனாதபடி எதிலும் உறைபவனே

எங்கோ பிறந்திருந்த அறியாத அடியேனை

கருணை மனம் கொண்டு காத்தருள செய்தவனே...!'

ஸாய்ராம்.



Wednesday, December 15, 2021

எல்லாமே சக்திமயம்


' நல்ல நல்ல நதிகளுண்டு - அவை

நாடெங்கும் ஓடி விளையாடி வருங்காண்

மெல்ல மெல்ல போயவை தாம் - விழும்

விரிகடற் பொம்மையது  மிகப் பெரிதாம்

எல்லையதிற் காணுவ தில்லை - அவை

எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்

ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை

ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண் '


( நாடெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் அனைத்தும், இறுதியில் கடலில் வந்து கலக்கின்றன. எல்லையில்லாமல் விரிந்திருக்கும் கடலில், நதிகள் வந்து கலக்கும் போது, அவைகளுக்கிடையே எந்த எல்லையும் இருப்பதில்லை. இரண்டும் இணையும் போது எழும் பேரோசை... ஓம் என்ற சக்தியின் ஒலியாக ஒலிக்கிறது.)


ஸாய்ராம்.


Tuesday, December 14, 2021

நம்பிக்கை


எனது பிரார்த்தனையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 

இறைவன் உங்கள் மீது அளவற்றை அனபைப் பொழிகிறார். உங்கள் வாழ்வில் என்ன நடந்திருந்தாலும்... மீட்கவே முடியாது என்ற ஆழமான குழியிலே நீங்கள் வீழ்ந்திருந்தாலும்... உங்களை நோக்கி கீழே இறங்கி வந்து, உங்களுக்குக் கை கொடுத்து, உங்களை தூக்கி மேலேற்றி, உங்கள் வாழ்வை முழுமையடையச் செய்கிறார்.

இறைவன் உங்களது மனதை, அவரது வார்த்தைகளால் புதுப்பிக்கிறார். உணர்ச்சிகளால் கொந்தளித்திருக்கும் மனதை  அமைதிப்படுத்துகிறார். உடலளவில் நம்மை குணப்படுத்துவது மட்டுமல்ல... பொருளாதார அளவிலும்  நம்மை உயர்த்தி விடுகிறார். தக்க நேரத்தில் உதவிடும் நட்புகளை அளிக்கிறார். தக்க சமூக சூழலை உருவாக்குகிறார். 

இறைவன் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறார். அந்த உதவியைப் பெற்றுக் கொள்வது சிரமமானது என்றாலும், இந்த உலகக் கட்டுகளிலிருந்து விடுபடுவதை விட சுலபமானதுதான். அதற்காக  நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது...அது, 'நம்பிக்கையுடன் இந்தப் பாதையில் பயணிக்கப் போகிறேன். என்னவானாலும் இந்த நம்பிக்கையை நான் கைவிடப் பொவதில்லை', என்பதுதான்..

- ஜாய்ஸ் மேயர்.

ஸாய்ராம்.


Saturday, December 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 203. Direction of Life (தசா - புத்தி - அந்தரம்)


 

ஒரு தேர் புறப்பட்ட இடத்திலிருந்து, அதே இடத்திற்கு வந்து சேருவதைப் போன்றதுதான் ஜீவர்களின் வாழ்க்கையும்.

தேர், அதன் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர, மூன்று இடங்களில் அதன் பாதையைத் திருப்ப வேண்டியிருக்கிறது. திருப்பக் கூடிய அந்த இடங்களில் 'சன்னக் கட்டை' என்ற ஒரு மரத்துண்டை பயன்படுத்தி, தேரின் சக்கரங்களை திருப்ப வேண்டியிருக்கிறது. அதைக் கையாள்பர்கள், மிகக் கவனமாக இருப்பது அவசியம். கவனக் குறைவு ஏற்பட்டால், கையாள்பவர்கள் தங்கள் கைகளையே இழக்க வேண்டியிருக்கும். 

அதுபோல, 'கர்ம வினைகள்' என்ற சுமையைச் சுமந்திருக்கும் இந்த உடம்பு என்ற தேரை, அதன் மூலமான ஆத்ம சொரூபத்தில் கொண்டு சேர்ப்பதற்கான 'முட்டுக் கட்டைகளைத்தான்', இறைவன் 'தசா - புத்தி - அந்தரங்கங்களாக' கையாள்கிறான். அதுவும், நமது கர்ம வினைகள் என்ற சூட்சுமக் கட்டுகளின் வழியாக... மிகவும் கவனமாக... சன்னக் கட்டைகளைக் கையாள்பவரகளைப் போல.

ஸாய்ராம்.




மனமது செம்மையானால்...


 

'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே !'


தூய ஒளி பெற்ற மனதைத்தான், செம்மையான மனம் என்று வருணிக்கிறார். அப்போது, மனதில் இருந்து எண்ணங்களாக வெளிப்படும் கர்ம வினைகள் அனைத்தும் முளையிலேயே கருகிப் போய் விடும்.

ஆனால், அந்த மனதை ஒளி பெற்ற மனமாக மாற்ற வேண்டுமெனில், மனதில் மந்திரத்தை உச்சரிப்பதும்... பிரணாயமம் என்று, வாயுவான பிராணனை அதன் உற்பத்தி ஸ்தானத்திற்கு உயர்த்தி அதில் நிலைக்க வைப்பதும்... இடகலை பிங்கலை என்று வாசியை அதன் மூலமான சுழுமுனையில் ஒன்ற வைப்பதும்... வழிகளாக இருக்கிறது.

இந்த வழிகளில் பயணித்து மனதை செம்மையாக்கி விட்டால்...மீண்டும் இந்த வழிகளுக்குள் பயணிக்க வேண்டியதில்லை ... மனதை அதன் மூலமான 'சுயப் பிரகாசத்தில்' சேர்த்து விடலாம்.

ஸாய்ராம்.



Friday, December 10, 2021

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை : பகுதி - 7. 'ஞான அனுபவம்'



 நிலையாமை என்ற சூழலை அனுபவிக்கும் போதுதான் ஞானம் பிறக்கிறது. உடலை விட்டு உயிர் பிரியும் போது ஏற்படும் அனுபவ ஞானத்தைத்தான் கவிஞர், இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்...

'சட்டி சுட்டதடா கை விட்டதடா...

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா...

நாலும் நடந்து முடிந்த பின்னே,

நல்லது கெட்டது தெரிந்ததடா...'

... என்ற நிதர்சனத்தை உணர்ந்த் பின், நிலையாமை எது என்பதையும், நிலைத்த தன்மைக்கு காரணமாக இருப்பது எது என்பதையும், மனம் ஆய்ந்து அறிந்து கொள்கிறது. உயிர்ப்புக்கு ஆதாரமாக இறைவன் இருப்பதையும்... அந்த உயிர்ப்புக்கு மூலமாக 'கர்ம வினைகள்' இருப்பதையும்... எப்போது கர்ம வினைகளைச் சுமந்து கொண்டிருக்கிற  உயிர்ப்பு, அதன் ஆதாரமான இறைவனிடம் சேரும் போது, கர்ம வினைகள் தானாக களைந்து போவதையும்... அடுத்த சரணத்தில் வடித்திருக்கிறார்

'பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா...

அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா...

...இந்த அமைதியை அனுபவிக்கும் மனதின் நிலையை, அடுத்த சரணத்தில் விவரிக்கும் போது,

'ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா...

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா...

தர்மதேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா...

மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா...'

...என்று வருணித்து, இந்த அனுபவம் உணர்த்தும் ஞானம் எவ்வாறானது என்பதை விவரிக்கும் போது, 

'எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - என்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா...

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா...

இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா...'

... ஒரு சிறிய எறும்புக்குள் இருந்து, ஒரு பெரிய யானை வருவது போல, நம் மனம் என்னும் சிறியதிலிருந்து, நமது மொத்த வாழ்வுக்குமான 'கர்ம வினைகள்', கடலிலிருந்து புறப்படும் தொடர் அலைகள் போல, வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது... மனம் 'ஞானானுபவத்தில்' திளைத்து விடுகிறது.

ஸாய்ராம்.


Thursday, December 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 202. 'சனி பகவானும், 8 ஆம் எண்ணும்...'


எண் கணித ஜோதிடத்தில், எண் 8... சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டிய எண்ணாக இருக்கிறது.

8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்... தேதி, மாதம் மற்றும் வருடத்தைக் கூட்டி வரும் எண் 8 ஆக அமையப் பெற்றவர்கள்... தனது பெயரின் ஆங்கில எழுத்துக்களின் எண் கணித எண்களைக் கூட்டி வரும் தொகை 8 ஆக அமையைப் பெற்றவர்கள்... இந்த 8 என்ற எண்ணின் ஆதிக்கத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

எண் கணித ஜோதிடத்தில் இந்த 8 என்ற எண், நவக்கிர நாயகரான 'சனி பகவானைக்' குறிப்பதாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் 'சனி பகவான்' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகளை', இந்த எண் பிரதிபலிப்பதை அனுபவத்திலும்  காணமுடிகிறது.

ஒருவரது ஜாதகத்தில் 'சனி பகவான்', திரிகோணாதிபதியாகவோ... கேந்திராதிபதியாகவோ... அமைந்து, ஜாதகத்தில் வலுத்திருக்கும் பட்சத்தில், 'சனி பகவான்' வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகள்' இந்த 8 என்ற எண்ணில் நடைபெறுவதில்லை. மாறாக, 5 (புத பகவான்), 6 (சுக்கிர பகவான்) அல்லது ஜாதகத்தில் வலுத்திருக்கும் கேந்திராதிபதிகள் (1, 4, 7, 10) அல்லது தன லாபாதிகளின் (2, 11) எண்களின் ஆதிக்கத்தில் நடைபெறுகின்றன.

அதே நேரத்தில், 'சனி பகவான்' வலு இழந்து, மறைவு, மாரக, பாதக ஸ்தானங்களில் அமைந்திருக்கும் பட்சத்தில், அவர் வெளிப்படுத்தும் கர்ம வினைகளின் விளைவுகள், இந்த 8 ஆம் எண்ணில் நடைபெறுவதைக் கண் கூடாகக் காண முடிகிறது. 

அது, 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளிலோ... தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் 8 ஆகவோ... சனிக் கிழமையிலோ... சனி பகவானின் சாரம் பெற்ற நட்சத்திரங்களிலோ, சனி பகவானின் ஹோரையிலோ... ஜாதகத்தில் சனி பகவானுடன் தொடர்பு பெற்ற கிரகங்களின் ஹோரைகளிலோ... நடைபெறுவதைக் காணமுடிகிறது.

நமக்கு நிகழும் 'கர்ம வினைகளின் விளைவுகளை' நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது எவ்வளவு நிதர்சனமோ, அது போல, நாம் நிகழ்த்துவதாக இருக்கும் கர்ம வினைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் நிதர்சனம்தான்.

ஆகவே, இந்த 8 ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குள் இருப்பவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் செயல்களை, இந்த 8 என்ற எண்ணின் ஆதிக்கத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்வதும்... 8 ஆம் எண்ணிற்கு சாதகமாக இருக்கும் 5 (புத பகவான்), 6 (சுக்கிர பகவான்), என்ற எண்கள் அமையும் நாட்களிலோ அல்லது தங்களுக்கு யோகாதிபதிகளாக இருக்கும் எண்களின் ஆதிக்கம் நிறந்த நாட்களிலோ... மேற்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஜோதிடம் என்பது கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும், எண் கணிதங்களை அடிப்படையாகக் கொண்டு இருந்தாலும், அது ஒரு 'வழி காட்டிதான்'. அது காட்டும் வழியில் பயணிப்பதற்கு 'இறைவனின் அருள்' மட்டும்தான் தேவைப்படுகிறது.

ஸாய்ராம்.




Wednesday, December 8, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 201. 'கர்ம வினைகளின் செயல்பாடுகளும்... நமது எதிர்கொள்தலும்...'


இன்றைய நாள்... காலை விழிப்புடன் ஆரம்பிக்கிறது. அதுவரை, நமக்குள்ளேயே அமிழ்ந்திருந்த ஜீவன், அதிலிருந்து வெளிப்பட்டு, அன்றைய 'கர்ம வினைகளை அனுபவிக்கத் தயாராகிறது.

அன்றைய நாளுக்கான  திட்டங்களை, நமது 'கர்ம வினைகள்' முன் வைக்கின்றது. உதாரணமாக... வழக்கம் போல, அலுவலகம் செல்வது. அலுவலக நண்பர் ஒருவரின் குடும்ப விழாவில் கலந்து கொள்வது.

இதற்கேற்ப, அலுவலக நேரத்திற்கு சற்று முன்னதாகவே கிளம்பி, நண்பர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்டு விட்டு, சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று விடுவது... என்ற திட்டத்தை தீட்டுகிறோம். அப்போது, நெருங்கிய உறவினர் ஒருவர், திடீர் உடல் நலக் குறைவினால், மருத்துவமனையில் அனுமதிருப்பதைப் பற்றிய  செய்தி வந்து சேருகிறது.

தற்போது, நமக்கு முன், நம்மால் திட்டமிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளும்... நம்மால் திட்டமிடப்படாத, எதிர்பார்க்காத ஒரு நிகழ்வும்... வந்து நிற்கின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொருத்துதான், அந்தக் கர்ம வினைகள் விளைவிக்கும் விளைவுகள் (பாபம் - புண்ணியம்) நம்மை வந்து சேரப் போகின்றன.

- அலுவலகக் கடமை நமக்கு விதிக்கப்பட்டது.

- உறவினரின் உடல் நலகுறைவும் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்றாகிறது.

- அலுவலக நண்பரின் குடும்ப விழா நிகழ்வு, நமக்கு விதிக்கப்படாத கடமையாக இருந்தாலும், அதில் கலந்து கொள்ளாவிடில், அந்த நண்பரை அலுவலகத்தில் எதிர் கொள்வது சங்கடத்தை ஏற்படுத்தும். 

இப்போது, இந்த மூன்று நிகழ்வுகளையும் நாம் எதிர்கொள்வது நமது கைகளில்தான் இருக்கிறது.

முதலில் அலுவலகத்தில் அரை நாள் விடுப்பைக் கேட்பது. இரண்டாவது, நண்பரின் குடும்ப விழாவிற்கு சற்று முன்னதாகவெ சென்று, நமது நிலைமையை விளக்கி, வாழ்த்துக்களையும், பரிசையும் கொடுப்பது. மூன்றாவதாக, மருத்துவமனைக்குச் சென்று உறவினருக்கு உதவி செய்வது. இறுதியாக அலுவலகம் சென்று நமது கடமையை பூர்த்தி செய்வது... என்பதாக நமது செயல்கள் அமையும் போது, விதிக்கப்பட்ட கடமைகளை மட்டுமல்ல விதிக்கப்படாத கடமையையும், முழுமையாகப் பூர்த்தி செய்தவராகிறோம்.

இதைத்தான், 'நமது வாழ்வு நமது கைகளில்தான் இருக்கிறது...' என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

ஸாய்ராம்.





 



Tuesday, December 7, 2021

சிவவாக்கிய சித்தர் பாடல்கள் : 'சங்கிரண்டு தாரை ஒன்று...'


 

'சங்கிரண்டு தாரை ஒன்று சன்ன பின்னல் ஆகையால்

மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை

சங்கிரண்டையும் தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்

கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே '


உள்ளும் வெளியுமாக பின்னப்பட்டுப் போகும், ஜீவ சக்தியான வாயுவின் கதி, எப்போது ஏக கதியாக (பிரணாயமம்) பிரம்மாந்திரத்தைத் தொடுகிறதோ, அப்போதுதான் ஜீவன் தொடர் பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு,, ஜீவனின்  உற்பத்தி ஸ்தானமான 'மரணமில்லாப் பெருவாழ்வான', பரப்பிரம்மத்துடன் ஒன்று கலக்கிறது.

இதுதான், 'ஜீவ ஈஸ்வர ஐக்கியம்' என்ற முக்தி.

ஸாய்ராம்

.


Monday, December 6, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 200. 'ஜோதிடப் பிரசன்னம்' - ஒரு அரிய வழிகாட்டி.


அண்மையில் ஒரு வாகன் விபத்தில், தனது துணைவியாரையும், துணைவியாரது தாயாரையும், தனது கண்களுக்கு முன்னாலேயே இழந்த ஒருவரைப் பற்றிய நிலையை நண்பர் தெரிவித்து, அவருக்கு ஒரு ஆறுதலை அளிக்க வேண்டினார். 

விபத்து நடந்து ஐந்து மாதங்களே கடந்த நிலையில், கல்லூரிப் படிப்பை கடந்து கொண்டிருக்கிற தனது இரண்டு குழந்தைகளையும், குடும்பத்தையும், தொழிலையும் பராமரிக்கும் சூழலில் தள்ளப்பட்டிருந்த நிலையில், ஆறுதல் மட்டுமல்ல வாழ்வைப் பற்றிய ஒரு ஆழ்ந்த நம்பிக்கையும், படைப்பவன் மீதான விசுவாசமும் அவருக்கு அவசியமானதாக இருந்தது.

இறைவன் மீதான நம்பிக்கையும், ஜோதிடத்தின் மீதான  அவ நம்பிக்கையும் நிறைந்த, அவரின் தற்கால சூழலை விளக்குவதற்கு அவரது ஜாதகத்தை ஆய்வு செய்வதில் தடைகள் இருந்தன. துணைவியாரின் மறைவிற்குப் பின்னால், அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவர் தவிர்த்திருந்ததும்... அவரின் மறைவின் முதல் வருடத் திதி முடியாமல் இருக்கும் சூழலும்... குல தெய்வ சன்னிதானத்திற்கு சென்று வழிபடமுடியாத சூழலும்...  இந்தத் தடைகளுக்கான காரணங்களாக அமைந்தன.

இந்த சூழல்களை விளக்கி, அவரது வீட்டிலேயே குல தெய்வத்தை பூஜிப்பதற்கு, ஒரு எளிய பூஜை முறையை மேற்கொண்டு, அந்த பூஜையின் நிறைவின் போது, தனது சூழலை விளக்கி, அவர் வரிசையாக எழுதியிருந்த சந்தேகங்கள் அடங்கிய தொகுப்பை சமர்ப்பித்து, ஒரு ஆழ்ந்த பிரார்த்தனையை வைத்து, பூஜையின் நிறைவாக தண்ட சமர்ப்பணம் செய்து எழுந்து, அந்த கணத்திற்கான 'நேரத்தை' குறித்து, அதற்கான 'ஜோதிடப் பிரசன்னத்தை' கணித்த போது... அவரின் அத்தனை சந்தேகங்களுக்குமான விடைகள், அதிலிருந்து வெளிப்பட்டன.

அவரின் நிலையை 'உள்ளங்கை நெல்லிக்கனி போல...' காட்டிய அந்த ஜோதிடப் பிரசன்னத்தின் கணிப்புகளை, அவரிடம் தெரிவிப்பதற்கு, மிக கண்ணியமான வார்த்தைகள் தேவைப்பட்டன. இதில் ஆச்சரியம் என்னவெனில், தயக்கத்துடன் வெளிப்படுத்திய கணிப்புகளை, அவர் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொண்டதுதான்.

ஜோதிடப் பிரசன்னத்தைப் பொருத்தவரை, கணிப்பவரின் கைகளில் ஏதுமில்லை... கேட்பவரின் கைகளில்தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது... என்பதுதான் உண்மை.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...