'ரதியே ! ரதிக் கிளியே !
ரதிக்கேற்ற மன்மதனே !
மாசில் பிறை தேடி...
மாலையிட்டுக் கோலமிட்டு..
அடித்துத் துரத்திடுவார், ஆனந்தப் பிள்ளையரே...!'
இந்தத் தெருக்கூத்து பாடலின் சப்தம், குழந்தைகளான எங்கள் அனைவரையும், வீட்டு வாசலுக்கே, இழுத்து வந்து விடும்.
அந்தக் கூத்தில், மன்மதனாகவும்... ரதி தேவியாகவும்.. வேஷமிட்டவர்கள், பாடும் பாடலையும், கதைப் பின்னனியையும், தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், கூத்தின் நடுவே கோமாளியாட்டம் போடுபவரின் சாட்டையடிக்குப் பயந்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக் கூட நண்பர்கள் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லக் கேட்கும் போது, அதை எப்போதாவது நேரில் சென்று பார்த்து விடத் தோன்றும்.
சிவபெருமானாரின் தவத்தைக் களைகப்பதற்காக... மன்மதன் மலர்க் கணைகளைத் தொடுப்பதும்... தவத்திற்கு இடையூறு ஏற்பட்டதால்... பெருமானாரின் நெற்றிக் கண் திறந்து, அந்தக் கனலினால் மன்மதன் எரிந்து சாம்பலாகிப் போவதையும்... ரதி தேவியின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கிய சர்வேள்வரனின் அருளினால், மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுவதையும்... நண்பர்கள் சொல்லும் போது, அந்தக் காட்சிகளிலேயே மனம் மூழ்கிப் போகும்.
மன்மதனாக வேடமிட்டிருப்பவர், தணலில் எரிந்து சாம்பலாகும் காட்சியில் மயங்கிய நிலையில் விரைத்துப் போவதும்... மூன்று நாட்களும் அன்னம், தண்ணீர் இல்லாமல் அதே நிலையில் இருந்து விட்டு, மூன்றாம் நாளின் இறுதியில் கண் விழிப்பதையும் கூறும் போது, அதை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்று, மனம் ஏங்கியிருக்கிறது.
இன்றும், மாசி மாதம் வரும் போதெல்லாம்... அந்தப் பாடல் வரிகள்தான் மனதில் வந்து போகிறது... 'ரதியே ! ரதிக் கிளியே !!...'
ஸாய்ராம்.
No comments:
Post a Comment