அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்
இராஜராமையன் என்ற நாகைப் பார்ப்பான்
முன் தனது பிதா தமிழில் உபநிடத்தை
மொழிபெயர்த்து வைத்தனைத் திருத்தச் சொல்லி
என்தனை வேண்டிக்கொள்ள யான் சென்று அங்கண்
இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச் சாமி
அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேசலுற்றேன் ;
'அப்பனே தேசிகனே ஞானி என்பார்
அவனியிலே சிலர் நின்னைப் பித்தன் என்பார்
செப்புற நல்ல அஷ்டாங்க யோக வித்தை
சேர்ந்தவன் என்று உனைப் புகழ்வார் சிலர் என்முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்
உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே
யாவன் நீ ? நினக்குள்ள திறமை யென்னே ?
யாதுணர்வாய் ? கந்தை சுற்றித் திரிவதென்னே ?
தேவனைப்போல் விழிப்பதென்னே ? சிறியாரோடும்
தெருவிலே நாய்களோடும் விளையாட்டென்னே !
பாவனையிற் புத்தரைப்போல் அலைவதென்னே !
பரமசிவம் போலுருவம் படைத்த தென்னே
ஆவலற்று நின்றதென்னே ! அறிந்த தெல்லாம்
ஆரியனே எனக்குணர்த்த வேண்டும்' என்றேன் !
பற்றிய கை திருகிய்ந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான் : யான் விடவே யில்லை
சுற்றுமுற்றும் பார்த்துபின் முறுவல் பூத்தான்
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான் ;
மற்றவன்பின் யான் ஓடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment