Monday, April 26, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 175. 'கிரக சேர்க்கைகளை அணுகும் முறை'


 ஜோதிடக் கலையின் மிக முக்கிய அம்சம்... அந்தக் கலையை 'அணுகும் முறையில்தான்' அடங்கியிருக்கிறது.

கிரகங்களின் அமைவுகள், நமக்கு, நமது வாழ்வின் சூட்சுமங்களை சுட்டிக் காட்டுகின்றன.நமது வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்... என்ற காரியங்களை நம்மால் ஓரளவு அறிந்து கொள்ள முடிவதைப் போல, அந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை நம்மால் அறிந்து கொள்ளவே முடிவதில்லை.

இந்தக் காரணங்களைத்தான், கிரகங்களின் சேர்க்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், அதையும் மிகவும் சூட்சுமமாகத்தான் சுட்டிக் காட்டுகின்றன. ஆதலால்தான், அணுகுமுறை என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

உதாரணமாக, 

~ 'சூரிய பகவானுடன், சனி பகவானின்' சேர்க்கை, பொதுவாகத் தந்தைக்கும், மகவுக்கும் இடையேயான 'உறவு பேதத்தை' சுட்டிக் காட்டுகிறது. 

ஆதலால், இந்த சேர்க்கை ஏற்பட்டிருக்கும் அனைவருக்கும், இதே போன்ற நிலை அமைந்து விடுவதில்லை. இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.

'ரிஷப லக்னத்தை' சேர்ந்த ஒரு ஜாதகருக்கு, இந்த சேர்க்கை, 12 ஆம் பாவத்தில், அதாவது, 'மேஷ இராசியில்' நிகழ்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த சேர்க்கையில் 'தன-பூர்வ புண்ணியாதிபதியான' 'புத பகவானும்' இணைந்திருக்கிறார். இந்த அமைவுக்கான பொதுவான பலன்களாக...

- தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையேயான உறவு சிறப்பாக இருக்காது என்றும்...

- தந்தையினதும்... தந்தை வழியிலான பூர்வ சுகங்களையும்... ஜாதகர் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும்...

- ஒருவருக்கு ஒருவர் எதிரெதிர் நிலையிலான வாழ்வுதான் அமையும் எனவும்...

- தந்தையிடமிருந்து அனுபவிக்கும் எந்த ஒரு பாக்கியத்தையும், ஜாதகரால் அனுபவிக்க முடியாது என்றும்... தான் கணித்தளிக்க முடியும்.

ஆனால், இந்த அமைவின் சூட்சுமத்தை ஆராய்ந்தால்...

~ 'சூரிய பகவான்', லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திரமான 'பரணி 1 ஆம் பாதத்தில்' அமர்ந்து லக்னத்திற்கு (ரிஷப லக்னம்) இணைவான கிரகமானார்.

~ 'சனி பகவான்', லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திரமான 'பரணி 3 ஆம் பாதத்தில்' அமர்ந்து லக்னத்திற்கும் (ரிஷ்ப லக்னம்)... லக்னாதிபதிக்கும் (சுக்கிர பகவான்) இணைவாகவும், நட்பாகவும் அமைந்தார்.

~ 'புத பகவான்', 'கேது பகவானின்' நட்சத்திரமான அசுவினி 1 ஆம் பாதத்தில்' அமைந்து, இந்த இணைவின்'மிக சூட்சுமமான' அமைவினைப் பெற்றார்.

இந்த சூட்சுமமான அமைவுகள்தான், இந்த கிரக சேர்க்கையின் பொதுவான பலன்களை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

- ஜாதகரின் மீது அவரது தந்தை அளவற்ற அன்பைப் பொழிந்தார். ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும், அமையப் பெற்ற குடும்பத்தில், மூன்றாவது பெண்ணாகப் பிறந்த இந்த ஜாதகர், தந்தையின் நிலைகளை நன்கு உணர்ந்தவராக இருந்தார்.

- இந்தப் புரிதல், குழந்தையாக இருந்த பொழுதிலிருந்து, ஜாதகர் மணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக மலரும் வரைத் தொடர்ந்தது.

- ஜாதகரின் அனைத்து வாழ்வு நிலைகளிலும், கடமைகளிலும்... (முடிந்த அளவுக்கு அளிக்க முடிந்த கல்வி, திருமணம், குழந்தைகளின் பிறப்பு, அவர்களுக்கான கடமைகள், கல்விக் கூடம் வரை வந்திருந்து குழந்தைகளை ஆசிர்வதித்தது, அவரின் கைகளாலே குழந்தைகளுக்கு வருடப் பூர்த்திகளின் போது ஜாதகம் கணித்து எழுதி வாங்கியது... என்று...) தந்தையின் அருகாமையும், பங்கீடும்... அளவற்ற அன்பும்... தொடர்ந்தது.

- திருமணத்திற்கு பிறகும், இந்த பிணைப்பு மேலும் வலுவடைந்தது. தந்தையின் மனக் கவலைகளை தீர்ப்பதிலும்... ஜாதகரின் மனக் கவலைகளை தீர்ப்பதிலும்...இந்த இருவரது அளவிலா அன்பு பெறும் பங்கை வகித்தது. எப்போதெல்லாம் இவர்கள் இணைகிறார்களோ, அப்போதெல்லாம் அந்த இணைவில், இந்த அன்புப் பிணைப்பு பூரணமாக இருந்தது... அவரின் மறைவு வரையிலும்.

- 'புத பகவானின்' அமைவு, 'கேது பகவானின்' சாரம் பெற்று அமைந்ததால்.. இவர்களின் அன்புப் பிணைப்புக்கு இடையில்...எந்த  லௌகீக விஷயங்களும் இடைபடவில்லை... அவர் இருந்த போதும், மறைந்த போதும்.

எனவே, ஜாதகத்தில் கிரகங்களின் அமைவுகளை அணுகும் போது, 'காரியங்கள்' என்ற 'சேர்க்கையை' மட்டும் கருத்தில் கொள்ளாமல்...'காரணம்' என்ற 'சூட்சுமத்தையும்' கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஸாய்ராம்.


Friday, April 23, 2021

நோக்கமும்... இயல்பும்...


சாதகர்களின் நிலையையும்... சாதாரண மனிதர்களின் நிலையையும்... பகவானுடனேயே இருந்து, அனுபவித்து மகிழ்ந்த 'ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்' வெளிப்படுத்துகிறார்.

இந்த இரு நிலைகளிலும் இருக்கும் மாந்தர்களின் நோக்கங்களையும்... இயல்புகளையும்... அவர் பிரித்து அளிக்கும் முறை, அலாதியானது.

இவ்வுலகில் வாழும் அனைத்து மாந்தர்களின் தேடலும்... இடைவிடா ஆனந்தத்தை நோக்கியதாகவே இருக்கிறது. இந்த ஆனந்தத்தை, உலகியல் நிலையிலிருந்து மாத்திரம் அனுபவித்து, அதன் மூலம் தனது ஐம்புலன்களையும் திருப்தி செய்யப் போராடும், சாதாரண மனிதனின் நோக்கம் ஒரு புறமும்... தனது உணவு, உடை, உறையுள் என்ற தேவைக்காக மட்டும், இந்த உலகியல் சுகத்தை அனுபவித்துக் கொண்டு, தன்னாட்டம் (Self - Attention) என்ற உள் தேடலுக்கு மிகுதி நேரத்தை பயன்படுத்தும், சாதகர்களின் நோக்கம் மறு புறமும்... என இரு விதமான நோக்கங்களை பிரித்தளிக்கிறார்.

இந்த இரு நிலைகளில் இருக்கும் மாந்தர்களின் இயல்புகள் எவ்வாறு இருக்கும்... என்பதையும் விளக்குகிறார். தனது சுகானுபவங்களுக்காக, அதர்மம் என்றும் பாராமல், எந்த விதமான வழி முறைகளையும் கையாளும் சாதாரன மனிதர்களின் இயல்பு ஒரு புறமும்... பசித்திருந்தாலும், தனித்திருந்தாலும், தவித்திருந்தாலும், தர்மத்தின் வழியான வாழ்வை மட்டுமே கையாளும் சாதகர்களின் இயல்பு மறு புறமும்... என, இரு விதமான இயல்புகளையும் விரித்தளிக்கிறார்.

ஸாய்ராம்.


Monday, April 19, 2021

திருக்குறள் உணர்த்தும் ஞானம் : பகுதி 8. 'தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு'


 'தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு'  (அதிகாரம் : தவம்  குறள் எண் - 266)


''தவம் செய்பவர்கள் தமக்குறிய கடமைகளைச் செய்பவர்களாகவும், ஏனையோர் ஆசைகளுக்கு உட்பட்டு, வீணான செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்' என்பதுதான், இந்தக் குறளுக்கு பொதுவாக வழங்கப்படும் கருத்தாக இருக்கிறது.

இதைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்... 'தவம்', 'கருமம்', 'ஆசை' என்ற மூன்று சொற்களின் பிரயோகம், இந்தக் குறளில் பொதிந்திருப்பதைக் காணலாம்.

இதில், 'கருமம்' என்பது, நாம் செய்ய வேண்டிய கடமைகளைக் குறிக்கிறது. அதைத்தான், 'விதிக்கப் பட்டவைகள்' என்று வரையறுக்கிறது வேதாந்தம்.

'ஆசை' என்பது, நம்மை உலக வாழ்க்கயில் இழுத்துச் சென்று, அதிலேயே மூழ்க வைத்து, அதில் விளையும் இன்ப துன்பங்களில் திளைக்க வைத்து, மீள முடியாத பிறவிச் சுழலில் தள்ளி விடுவதற்கு மூலமாக இருக்கிறது. இதைத்தான், 'விதிக்கப் படாதவைகள்' என்று வரையறுக்கிறது வேதாந்தம்.

இந்த இரண்டு நிலைகளையும் பகுத்து அறிவதுதான்... 'தவம்' என்ற ஞானத் தேடல். இதைத்தான், 'ஞானம்' என்று வரையருக்கிறது, வேதங்களின் சிகரமான வேதாந்தம்.

இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவனுக்கு, விதிக்கப் பட்டது மற்றும் விதிக்கப் படாதது என்ற இரு நிலகளைப் பற்றிய ஞானத்தை அருள்கிறார், வள்ளுவர்.

தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை, தான் இறைவனின் கைகளில் இருக்கிற ஒரு கருவி என்ற எண்ணத்தோடு மட்டும் எதிர் கொள்பவரைத்தான், 'தவஞ் செய்வார்...' என்று வருணிக்கிறார்.

தனக்கு விதிக்கப்படாத செயல்களை, தனது ஆசைகளின் காரணமாக, தான்தான் செய்வதாகக் கருதிக் கொண்டு, அவற்றில் வீணாக ஈடுபட்டு, அல்லல் படுபவரைத்தான், 'அவஞ் செய்வார்...' என்று வருணிக்கிறார்.

ஆதலால், விதிக்கப் பட்டவைகளை மட்டும், தன்னைக் கருவியாகக் கருதிக் கடமைகளாகச் செய்பவரை, 'கருமமே கண்' என்று கருதி தவம் செய்பவராகவும்... ஏனையோர்களை வீணான முயற்சிகளில் ஈடுபட்டுத் தங்களது பிறவியை வீணடிப்பவர்களாகவும்... வருணிக்கிறார்.

வேதங்களின் சிகரமான வேதாந்தம் உணர்த்துவதை, தனது ஈரடி வெண்பாவின், ஏழு சொற்களுக்குள் அடக்கிடும் வள்ளுவரின் வல்லமையை... என்னவென்று வருணிப்பது... !

ஸாய்ராம்.


Friday, April 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 174. 'பிராணாயாமம்' பகுதி - 3.


 முன் பக்கத் தொடர்ச்சி...

(இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப்பட்டும்... இயங்கும் சுவாசத்தை இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்... )

2. பிரணாயாமம் என்ற உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய 'ஏக கதி' பயணத்தை அறிந்து கொள்வதும், அதன் வழியே பயணிப்பதும்.

நாம் இதுவரை பயணித்த கடந்த இரு பகுதிகளின் வழியாக, 'ஏககதி' என்ற உள் வழியான சுவாசத்தைப் பற்றி அறிந்திருப்போம். இந்த 'ஏககதி' என்பது, ஆழ்ந்த உறக்கத்தின் போது, நமக்குள் நம்மை அறியாமலே நடந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்பின் போது முயல்வதே... 'பிராணாயமம்' என்ற சுவாசப் பயிற்சி.

இயல்பாகவே நமக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த சுவாச கதியை... விழிப்பில் முயற்சிப்பதற்கு முன், நம்மை உடலளவிலும்... மன அளவிலும்... தயார் செய்து கொள்வது அவசியம். 

~ இந்த உள் கதி நமக்குள் நிகழ்கிறது, ஆனால், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மட்டும் அப்போது, இதை அறிந்தவராக இருப்பது, நமது மனதின் சாட்சியான ';ஆத்மாதான்'.அந்த ஆத்மாவோடு' ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுதான், முதல் படி. இது மனதை தயார் செய்கிறது.

~ இந்தத் தொடர்பு நிகழ்ந்து விடும் போது, நமது உடல் அதற்கேற்றவாறு தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறது.

~ இந்த இரண்டும் நிகழ்ந்து விடும் போது, நமக்கு ஒரு இயல்பான ஆசன முறை வந்து கூடுகிறது.

~ இந்த மூன்றும் நிகழும் போது, 'சீடன் தயாராக இருக்கும் வேளையில்... தக்க குருவின் தொடர்பு தானாக வந்து கை கூடும்...' என்பதற்கு இணங்க... இந்த உள் சுவாசம் என்ற 'பிரணாயாமத்தை' கற்றுக் கொடுக்க, தக்கதொரு குரு வந்து சேர்வார்.

இந்த 'பிரணாயாமம்' என்ற உள் சுவாசப் பயிற்சிக்கு தக்கதொரு குரு தேவை என்றாலும்... அதைப் பற்றிய சில வழி முறைகளை அறிந்து கொள்வது உபயோகமாக இருக்கும்.

* இந்தப் பயிற்சி உள் நோக்கியதாக இருப்பதால்... கண்களை திறந்து கொண்டு உறுப்புகளின் மீது கவனத்தை வைக்கும் 'வெளி சுவாசப் பயிற்சியைப்' போலல்லாமல்... கண்களை மூடியபடி, கவனத்தை மட்டும் மூச்சின் மீது வைப்பதாக இருக்கும்.

* எனவே, நாம் நமக்கு இயபாகாக அமையும் ஒரு ஆசன முறையைக் கைக் கொள்வது அவசியம்.

* நாம் முச்சின் மீது வைக்கும் கவனம்... மூச்சின் நீளத்தை முற்றிலுமாக ஆய்ந்து பார்க்கும் வல்லமையைக் கொடுக்கும்.

* இவ்வாறு, நமது கவனம் முழுவதுமாக மூச்சின் மீது இருக்கும் போது, நமது கவனம் படிப்படியாக மூச்சின் மூலமான, அதன் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

* எப்போது, அந்த உற்பத்தி ஸ்தானம் நமதின் கவனத்திற்கு வருகிறதோ... அப்போதுதான், நாம் இந்த 'பிரணாயாமம்' என்ற சுவாசத்தின் இயல்பான சுவாசக் கதியில் இருப்பதை உணர்வோம்.

எவ்வாறாயினும், இந்தப் பயிற்சி நம்மை, அதன் மூலமான ஆத்ம சொரூபத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதால்... தக்கதொரு குருவின் மூலம், இந்தப் பயிற்சியை மேற்கொள்வதே உத்தமம்.

ஸாய்ராம்.


                                                                                                                        

Thursday, April 8, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 173. 'பிராணாயாமம்' பகுதி - 2.

முன் பகுதித் தொடர்ச்சி ...

(இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப்பட்டும்... இயங்கும் சுவாசத்தை இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்,...)

1. 'சுவாசப் பயிற்சி' என்ற... பின்னப்பட்ட சுவாசத்தை அறிந்து கொள்வதும், அதை முறைப்படுத்துவதும்.

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நமக்குள்ளேயே 'ஏக கதியாக' சலித்துக் கொண்டிருக்கும் 'ஜீவ சக்தியான வாயு', நாம் கனவுலகத்தில் சஞ்சரிக்கும் போதோ... அல்லது விழித்திருந்து உலக வாழ்வில் சஞ்சரிக்கும் போதோ... பின்னப்பட்டு, நமது நாசியின் வழியாக 'இடகலையாகவோ' அல்லது 'பிங்கலையாகவோ'...வெளிப்படுகிறது.

இதைத்தான் நாம், சாதாரணமாக 'சுவாசம்' என்று சொல்கிறோம். இந்த சுவாசத்திற்கு. நுரையீரல்களும், சுவாசக் குழாய்களும், வாயும், நாசித் துவாரங்களும் உதவி செய்கின்றன. நுரையீரல்களிடம் இருந்து, சுவாசக் குழாய்கள் வழியாக நமது தொண்டையை அடையும் மூச்சுக் காற்று, வாய் வழியாகவும்... நாசித்துவாரங்கள் வழியாகவும்... வெளி உலகத் தொடர்பைப் பெறுகிறது.

இந்த சுவாசத்தை சீராக்கும் பயிற்சி முறையைத்தான், 'சுவாசப் பயிற்சி' என்று அழைக்கிறோம்.

~ மூச்சுக் காற்றை உள்ளும், வெளியும் இழுத்து விட்டு, நாசித் துவாரங்களை சுத்தப் படுத்துவது...

~ ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வழியாகவும் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து நுரையீர்களை நிரப்புவது...

~ பின் அதைச் சீராக வெளியில் விட்டு, இறுதியில் சிறிது நேரம் முச்சின்றி இருக்கப் பழகுவது...

இந்த சுவாசப் பயிற்சி முறையை, 'யோகாசன பயிற்சி முறைகளை' அறிந்த ஒரு பயிற்சியாளரிடமிருந்து கற்றுக் கொள்வதுதான் முறையாக இருக்கும்.

ஏனெனில், பயிற்சி செய்பவரின் வயது... உடல் பருமன்... அவரின் ரத்த அழுத்தம்... இவற்றை முறையாய் அறிந்து கொண்டு, அதற்கேற்ற பயிற்சியை ஒரு பயிற்சியாளரால்தான் அளிக்க முடியும்.

தொடர்ந்து, பிராணாயாமம் என்ற, ஏககதியைப் பற்றி ஆய்வோம்... இறைவனின் அருளைக் கொண்டு...

ஸாய்ராம்

.


Wednesday, April 7, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 172. 'பிராணாயாமம்' பகுதி - 1.


சர்வ சக்தியாக இருக்கும் 'பிரம்மம்', ஜீவனாக அவதரித்திருக்கும் நமக்குள்ளே, 'ஜீவ சக்தியான' வாயுவாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறு, ஒரு நீர்த் தொட்டியில் நிறைந்திருக்கும் நீர், நமது அன்றாட வாழ்வின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, இறுதியில், அந்த தொட்டியை நீரற்றுக் காய்ந்து போகச் செய்கிறதோ, அது போலத்தான், இந்த உடம்புக்குள் எழுந்திருக்கும் ஜீவனுக்கான 'உயிர்ப்புத் தன்மையும்'. ஜீவனுக்கென நிணயிக்கப்பட்ட வாழ்வு காலம் முழுவதும் ஜீவனை இயக்கும் இந்த 'உயிர் சக்தி', இறுதியில் ஜீவனின் வாழ்வுக் காலம் முடியும் தருவாயில், இந்த உடலை விட்டு 'அற்றுப் போகிறது'.

ஜீவ சக்தி... உயிர்ப்புத் தன்மை... உயிர் சக்தி... என்றெல்லாம் வருணிக்கப்படும் 'பிரம்ம சக்திதான்'... வாயுவாக நமக்குள் சலித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஓட்டம் நமது உடலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது... நாம் 'உயிருடன் இருப்பது' உறுதி செய்யப் படுகிறது. எப்போது, அந்த ஜீவ சக்தியான வாயு, அதன் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து 'அற்றுப் போகிறதோ'... அல்லது, 'விட்டும் போகிறதோ... அப்போதுதான், இந்த ஜீவன் 'உயிரற்று இருப்பது' உறுதி செய்யப்படுகிறது.

ஜீவ சக்தியான வாயுவின் சலனத்தையொட்டியே, வாழ்வும் மறைவும் தீர்மானிக்கப் படுகின்றன. இந்த வாயு, நாம் உறங்கும் போது, நமது உடலுக்கு உள்ளாகவும்... நாம் விழித்திருக்கும் போது, இந்த உலகத்துடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது.

நம்மைத் தவிர, ஏனைய உயிரினங்கள் அனைத்திற்கும், இந்த சுவாசம், 'பின்னப் படாமல்', ஏக கதியாக, அதன் 'உற்பத்தி ஸ்தானத்தை' நோக்கிய பயணமாக, அமைந்து விடுகிறது. நமக்கு மட்டுமே, இந்த சுவாசம் 'பின்னப் பட்டு', உறங்கும் போது 'ஏக கதியாகவும்'... விழித்திருக்கும் போது 'பின்னப்பட்டும்' அமைந்து விடுகிறது.

இந்த ஏக கதியின் பயணத்தை 'சுழு முனை' எனவும்... பின்னப்பட்ட பயணத்தைத்தான், 'இடகலை' (சந்திர கலை) என்றும் 'பிங்கலை' (சூரிய கலை) என்றும் அழைக்கிறோம். 

உதாரணமாக, யானைக்கு எப்போதும், 'ஏக கதியில்தான்' சுவாசம் அமைந்திருக்கும். அதன் தும்பிக்கையின் இரண்டு துவாரங்களிலிருந்தும், எப்போது ஒரே சீராக மூச்சுக் காற்று வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், நமக்கோ. நம்மை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது (துரிய நிலை) ஏக கதியாகவும்... விழித்துக் கொண்டிருக்கும் போது, பின்னப் பட்டு, நமது 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, இடகலையாகவோ, பிங்கலையாகவோ அமைந்து விடுகிறது. அதனால்தான், ஏக கதி என்ற, முச்சுக் காற்றின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய, சுழுமுனைப் பயணத்தில் சுவாசத்தை மேற்கொண்டிருக்கும் இருக்கும், யானையின் தும்பிக்கை ஆசீர்வாதத்தை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப் பட்டும் இயங்கும் 'சுவாசத்தை' இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்,

1. சுவாசப் பயிற்சி என்ற... பின்னப் பட்ட சுவாசத்தை அறிந்து கொள்வதும், அதை முறைப்படுத்துவதும்.

2. பிராணாயாமம் என்ற... உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய 'ஏக கதி' பயணத்தை அறிந்து கொள்வதும், அதன் வழியே பயணிப்பதும்.

இந்த இரண்டு சுவாச முறைகளைப் பற்றி, தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு....

ஸாய்ராம்.


Tuesday, April 6, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 171. 'இன்று (6.4.2021) பிரதான கோள்கள் இரண்டும் நடத்துகிற கோலாட்டம்'

இது, தேர்தலைப் பற்றியதோ... அதில் பங்கெடுத்திருக்கும் கட்சிகளைப் பற்றியதோ... அல்லது, யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது பற்றியதான ஆய்வோ அல்ல... 'இரண்டு பிரதான கிரகங்களான', 'சனி பகவான்' மற்றும் 'குரு பகவான்' ஆகியோரின் நிலைப்பாடுகளைப் பற்றியதான ஆய்வுதான்.

# தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த மார்ச் மாதம் 12 ஆம் தேதியிலிருந்து, பிரச்சாரம் பூர்த்தியான ஏப்ரல் 4 ஆம் தேதி வரையில்... 'கால புருஷ இராசியான'... 'மேஷ இராசிக்கு',

~ 'பாக்கியம்' மற்றும் 'தர்மம்' (9 ஆம் பாவம்) என்ற ஸ்தானத்திற்கு அதிபதியான 'குரு பகவான்' தனது பலத்தை இழந்து 'நீச நிலையில்' சஞ்சரித்தார்.

~ 'கர்மம்', 'ஜீவனம்' மற்றும் 'லாபம்' என்ற ஸ்தானங்களுக்கு அதிபதியான 'சனி பகவான்' தனது வீட்டிலேயே 'ஆட்சி பெற்று' பலமுடன் காணப்பட்டார்.

~ 'சனி பகவானின்' ஆட்சி பலத்தினால், தனது 'நீச நிலையிலிருந்து' விடுபட்டு, 'குரு பகவான்'... 'நீச பங்க ராஜ யோகம்' என்ற வலுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

~ இந்த இரண்டு பிரதான கிரகங்களின் சேர்க்கையினால்... 'தர்ம கர்மாதிபதி' என்ற உன்னத யோகம்... 'கர்மம் என்ற ஜீவன' பாவத்தில் ஏற்பட்டது.

~ அது மட்டுமல்ல... இந்த யோக பாவத்தினால், 'குரு பகவானின்' மற்றொரு வீடான 'சுக-சயன-விரய பாவமான' 12 ஆம் பாவத்தில் அமைந்திருந்த, 'நீசம் பெற்ற' புத பகவானும்... 'உச்சம் பெற்ற' சுக்கிர பகவானும்... பூர்வ புண்ணியங்களுக்கான சூரிய பகவானும்... தங்களது நிலைகளில் வலுத்து இருந்தார்கள்.

இந்த நிலைகளால்...

* கட்சிகளிடமும்... வாக்காளர்களிடமும்... நியாயத்தையும், தர்மத்தையும், முன்னிருத்தும் அவசியம் தென்பட ஆரம்பித்தது. 

* அனைத்து வேட்பாளர்களின் பிரசாரங்களிலும் கூட்டம் கூடி நின்றது.

* ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின்... குறை நிறைகள் விரிவாக அலசப்பட்டன.

* காலத்தைக் குறிப்பிடும், இராசியாதிபதியான 'செவ்வாய் பகவானின்' ஆளுமை, அனைத்தையும் அமைதியாக கண்காணித்துக் கொண்டிருந்தது.

* வாக்காளர்களைக் குறிப்பிடும், சுகாதிபதியான (4 ஆம் பாவம்) 'சந்திர பகவான்' மட்டும்... தனது நிலையை வெளிப்படுத்தாமல்... மாறி, மாறி அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்துக் கொண்டிருந்தது.

# தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த ஏபரல் 4, 2021 ஆம் தேதியிலிருந்து இன்றைய தேர்தல் நாளான ஏப்ரல் 6, 2021 ஆம் தேதியில்தான்... இந்த 'இரண்டு பிரதான' கிரகங்களுக்கு இடையேயான 'கோள்களின் கோலாட்டம்' நிகழ ஆரம்பித்தது.

~ தேர்தல் அறிவித்து பிரச்சாரம் ஆரம்பித்து, ஓயும் வரை நிகழ்ந்திருந்த' தர்ம கர்மாதி யோகம்', தேர்தலுக்கு முதல் நாளும் (ஏப்ரல் 5)... தேர்தல் நாளும் (ஏப்ரல் 6), தனது யோக நிலையிலிருந்து விடுபட்டுப் போனது.

~ 'கர்மம் மற்றும் ஜீவனத்திற்கு' அதிபதியான 'சனி பகவானிடமிருந்தும்'... தனது நீச நிலையிலிருந்தும்... விடுபட்ட தர்ம ஸ்தானாதிபதியான 'குரு பகவான்', லாபம் என்ற ஸ்தானத்திற்கு இடம் பெயர்ந்து விட்டார்.

~ வாக்காளர்கள் என்ற நிலையைச் சுட்டிக் காட்டும், 'சுகாதிபதியான' சந்திர பகவான், கிருஷ்ண பக்ஷம் என்ற தேய் பிறையாகி... இந்த 'இரண்டே கால் நாட்களிலும்', கர்மாதிபதியான 'சனி பகவானுடன்' இணைந்து விட்டார்.

~ நீச பங்கம் என்ற நிலையிலிருந்து விடுபட்ட 'குரு பகவானது' நிலையினால், 'புத்திக் காரகனான' புத பகவான் தனது 'நீச பங்கத்தை' இழந்து வலிமை இழக்கிறார்.'சுக போகக் காரகனான' சுக்கிர பகவான் தனது பலத்தை வலிமையாக்கிக் கொள்கிறார். பூர்வ புண்ணியக் காரகனான 'சூரிய பகவான்' தனது வலிமையை இழந்து நிற்கிறார்.

இந்த நிலைகளினால்...

* தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடிக்க விரும்பிய கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்ளின் மனதில் கலக்கம் ஏற்பட ஆரம்பித்தது.

* எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பிலிருக்கும் வேட்பாளர்களிடமிருந்து நியாயமும்... தர்மமும்... ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

* அவர்களின் தர்மத்திற்கு எதிரான பயணத்தில்... ஏப்ரல் 4 வரையில் ஸ்திரமாக இருந்த பெரும்பான்மையின வாக்காளர்கள், மன சஞ்சலத்திற்கு உள்ளாகி... தங்களது கடமை என்ற அஸ்திரத்தை சொற்ப தொகைகளுக்காக அடகு வைக்க நேர்ந்தது.

*' கொடுப்பவரிடமிருந்து' (ஒரு கட்சி வேட்பாளர்) பெற்றுக் கொள்வதே அதர்மம் என்றால்... அதைவிட ஒரு படி மேலே போய், 'கொடுப்பவர்களிடம்' (ஒன்றுக்கு மேற்பட்ட கட்சி வேட்பாளர்கள்) இருந்தும் பெற்றுக் கொள்வதின் 'அதர்மம்'... என்ற நியாயம் மறந்து போனது.

இந்த இரண்டு பிரதான கிரகங்களான 'குரு பகவான் மற்றும் சனி பகவான்' ஆகியோரின் முதல் இரண்டு வாரங்களுக்கான இணைந்த 'தர்ம கர்மாதிபதி யோகத்தையும்'... இறுதி இரண்டு நாட்களுக்க்கான பிரிந்த நிலைகளையும்... 'கோள்களின் கோலாட்டம்' என்பதைத் தவிர, வேறெவ்வாறு அழைக்க முடியும்...!

ஸாய்ராம்.

                                       

Friday, April 2, 2021

எது நம்பிக்கை... ?

கமலா, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த 13 வயதுச் சிறுமி. பகவான் ஹரியின் மீது அதீத பக்தி கொண்ட கமலாவின் குடும்பம், கங்கைக் கரையோரத்தில், பசுக்களை வளர்த்து, அவை அளிக்கும் பாலை, அண்டை வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு நிம்மதியாக ஜீவனம் நடத்தி வந்தது.

கங்கைக் கரையின் அக்கரையிலிருக்கும் கிராமங்களுக்கு, பிரயாணிகளைக் கொண்டு சேர்க்கும் ஓடக்காரர், கமலாவின் தந்தையிடம், 'அக்கரையில், தனது மாணவர்களுடன் வசித்து வரும் பண்டிதருக்கு பால் தேவைப் படுகிறது. உங்களால் கொடுக்க முடியுமா...?' என்று கேட்டார். 'ஆற்றைக் கடந்து கமலா எவ்வாறு பாலைக் கொண்டு சேர்ப்பாள்...?' என்ற கேள்விக்கு, 'நான், ஒவ்வொரு நாள் காலையிலும், கமலாவை சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன். கவலை வேண்டாம்' என்று உறுதி அளித்தார்.

அதன் படியே, காலையில் ஓடத்தில் பாலுடன் பயணித்த கமலா, ஹரியின் பாடல்களைப் பாடியவாறே, நதியைக் கடந்து பண்டிதரின் குடிலுக்குப் போய் சேர்ந்தாள். மகிழ்ச்சியடைந்த பண்டிதர், 'இது போலவே, நேரம் தவறாமல் வந்து விட வேண்டும். தவற விட்டால், எனது காலை அனுஷ்டானங்கள் அனைத்தும் கெட்டு விடும்' என்று கூற, மகிழ்வுடன் தலையாட்டினாள் கமலா.

நாளாக நாளாக ஓடக்காரரின் நேரம் தவற ஆரம்பித்தது. கமலாவாலும் நேரத்திற்கு பாலைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. வாரக் கடைசியில் கணக்குத் தீர்க்கும் நாளன்று, கமலாவின் கால தாமதத்தைக் கடுமையாகக் கண்டித்தார், பண்டிதர்.

மனமுடைந்த கமலா ஓடத்திற்காகக் காத்திருக்கும் போது, பண்டிதர், தனது மாணவர்களுக்கு அளிக்கும் போதனை, அவளின் கவனத்தை ஈர்த்தது. 'பிறவி என்பது பெரும் கடலைப் போன்றது. அதைக் கடந்து போவதற்கு கருவியாக இருப்பது ஹரியின் நாமம் ஒன்றே !,'என்ற பண்டிதரின் போதனை, இயல்பாகவே ஹரியின் மீது அன்பு கொண்ட, கமலாவின் மனதை, மேலும் நம்பிக்கையால் நிறைத்தது.

அடுத்த நாள் காலை, ஓடக்காரரின் வருகை தாமதமாகவே, பண்டிதரின் கண்டனம் கமலாவின் மனதில் நிழலாடியது. அதே வேளை, அவரது நம்பிக்கை மிகுந்த போதனையும், நினைவுக்கு வந்தது. 'ஹரியின் நாமம் கடலையே கடக்கும் வல்லமையுள்ளது என்றால், இந்த ஆற்றைக் கடப்பது கடினமா என்ன...!'  என்ற எண்ணம் வேரூன்றவே, சற்றும் தாமதிக்காமல், ஹரியை மனதில் இருத்தி, அவரது நாமத்தை உச்சரித்த படியே, பால் கூடையைத் தலையில் தாங்கி, ஆற்றின் மிது நடக்க ஆரம்பித்தாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அந்த ஆற்றைக் கடந்து, குடிலுக்குச் சரியான நேரத்தில் பாலைக் கொண்டு போய் சேர்த்தாள் கமலா.

மகிழ்ச்சியடைந்த பண்டிதர், 'என்ன... ஓடக்காரர் சரியான நேரத்தில் வந்து விட்டாரா ?' என்று கேட்க, கமலா, 'இல்லை ஐயா, அவர் வழக்கம் போல தாமதித்து விடவே, அவரை எதிர்பார்க்கமால், நானே ஆற்றைக் கடந்து வந்து விட்டேன்' என்றாள். 'எப்படி உடைகளும் நனையாமல், பாலும் சிந்தாமல், குறித்த நேரத்திற்குள் உன்னால் வர முடிந்தது ?' என்ற பண்டிதரின் ஆச்சரியமான கேள்விக்கு, 'நீங்கள்தான், அன்று, கடலையே கடக்கும் வல்லமை, பகவான் ஸ்ரீ ஹரியின் நாமத்திற்கு உள்ளது...என்று கூறினீர்கள். அந்த உபாயத்தைத்தான் நான் கடைப் பிடித்தேன். மிக எளிதாகக் கடந்தும் வந்து விட்டேன்' என்றாள்.

அவளின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டார் பண்டிதர். இவ்வளவு எளிய, கல்வி அறிவில்லாத, மாடுகள் மேய்த்து வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணால், எவ்வாறு இந்த அற்புதத்தை நிகழ்த்த முடிந்தது ? என்ற எண்ணம் மேலிட, 'ஆற்றை, நீ நடந்து கடந்து போவதைப் பார்க்க, நானும் வருகிறேன்' என்றார் பண்டிதர். 'மிகவும், மகிழ்ச்சி ஐயா... என்னோடு எங்களது வீட்டிற்கும் வாருங்கள். எனது தந்தை உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருப்பார் !' என்றாள் கமலா.

பட படப்புடன், கரைக்கு வந்த பண்டிதரின் கண் முன்னே, கரையிலிருந்து மிக லாவகமாக, தரையில் நடப்பதைப் போலவே, கங்கையின் மீது நடக்க ஆரம்பித்தாள் கமலா. சற்று தூரம் சென்றதும், திரும்பி கரையில் இருக்கும் பண்டிதரைப் பார்த்து, கையை அசைக்க, கமலாவைப் பார்த்தபடியே நதியின் மீது காலை வைத்த பண்டிதருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.அவரை அறியாமலேயே, அவர் நதியின் மீது நின்று கொண்டிருந்ததுதான் அது. தன்னிச்சையாக, தனது வேஷ்டியை, நீரில் நனைந்து விடாதபடி தூக்கிப் பிடித்த கணமே, அவர் தண்ணிரில் மூழ்கித் தத்தளிக்க ஆரம்பித்தார்.

பார்த்துக் கொண்டிருந்த கமலா, வேகமாக ஓடி வந்து தனது கைகளைக் கொடுத்து, பண்டிதரைத் தூக்கி கரையை நோக்கி அழைத்து வந்தாள். கரையை அடைந்த பண்டிதர், தனது கவனத்தை கமலாவின் மீது வைத்த போது, தண்ணீரில் நிற்க முடிந்ததும்.. தனது வேஷ்டியின் மீது வைத்ததும், மூழ்க நேர்ந்ததையும்... நினைத்து வெட்கத்தில் மூழ்கிப் போனார். 

கமலாவின் நம்பிக்கையையும்... தனது நம்பிக்கையின்மையையும்... நினைத்த படியே, கமலாவின் தலையின் மீது, தனது கைகளை வைத்து, 'உன்னிடமிருந்து நான், ஹரியின் மீது வைக்கும் நம்பிக்கையைக் கற்றுக் கொண்டேன். உனது வாழ்வு, என்றென்றும், ஹரியின் நாமம் போலவே இனிக்கட்டும் !' என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

- பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்..

ஸாய்ராம்.



Thursday, April 1, 2021

அருணையின் ரமணா, அணையா விளக்கே... !

( அருணாச்சலேஸ்வரரின் அனுக்கிரகத்துடன், பகவான் ரமணரின் எல்லையில்லாத கருணையினால், அடியேனின் மனதில், 2.3.2008 அன்று உதித்த பாடல்)

அருணையின் ரமணா, அணையா விளக்கே

அருளொளி வீசும், தென்முகக் குருவே

பரந்திடும், விரிந்திடும், தொலைந்திடும் வாழ்வினை

உள்ளொளி காட்டி ஈர்த்திடும் சுடரே... !


ஈசனின் சலனமாய், சக்தியின் ரூபமாய்

வினைகளின் விளைவே, மாயையின் தோற்றம்

மாயையின் உள்ளே, மறைந்திட்ட மனதினை

தேர் கொண்டு செலுத்தும் திருச்சுழிநாதா... !                          (அருணையின்...)


அகத்தின் நிழலாய், புறத்தில் தோன்றும்

மாயையின்  உடலை, நிலையென நினைக்கும்

மனதினை மாற்றி, கனவினை நீக்கி

நிஜமதைக் காட்டும் நித்திய வடிவே... !                                     (அருணையின்...)


மலைகளைப் போலே, எழும் கடலலையை

உள்ளின்று இழுக்கும், புவிவிசை போலே

மனதினில் தோன்றும், வினைகளின் அலையை

உள்ளின்று நீயும், இழுத்திடு உடனே... !                                      (அருணையின்...)


இலக்கினை நோக்கி, குதிரையை செலுத்தும்

சாரதி கையின், சாட்டைகள் போலே

மனதினில் தோன்றும், முடிவுறா ஆசையை

புத்தியைக் கொண்டு, உன் வசம் திருப்பு... !                                (அருணையின்...)


ஓம் ரமணாய நமஹ !

ஸாய்ராம்.

       

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...