( அருணாச்சலேஸ்வரரின் அனுக்கிரகத்துடன், பகவான் ரமணரின் எல்லையில்லாத கருணையினால், அடியேனின் மனதில், 2.3.2008 அன்று உதித்த பாடல்)
அருணையின் ரமணா, அணையா விளக்கே
அருளொளி வீசும், தென்முகக் குருவே
பரந்திடும், விரிந்திடும், தொலைந்திடும் வாழ்வினை
உள்ளொளி காட்டி ஈர்த்திடும் சுடரே... !
ஈசனின் சலனமாய், சக்தியின் ரூபமாய்
வினைகளின் விளைவே, மாயையின் தோற்றம்
மாயையின் உள்ளே, மறைந்திட்ட மனதினை
தேர் கொண்டு செலுத்தும் திருச்சுழிநாதா... ! (அருணையின்...)
அகத்தின் நிழலாய், புறத்தில் தோன்றும்
மாயையின் உடலை, நிலையென நினைக்கும்
மனதினை மாற்றி, கனவினை நீக்கி
நிஜமதைக் காட்டும் நித்திய வடிவே... ! (அருணையின்...)
மலைகளைப் போலே, எழும் கடலலையை
உள்ளின்று இழுக்கும், புவிவிசை போலே
மனதினில் தோன்றும், வினைகளின் அலையை
உள்ளின்று நீயும், இழுத்திடு உடனே... ! (அருணையின்...)
இலக்கினை நோக்கி, குதிரையை செலுத்தும்
சாரதி கையின், சாட்டைகள் போலே
மனதினில் தோன்றும், முடிவுறா ஆசையை
புத்தியைக் கொண்டு, உன் வசம் திருப்பு... ! (அருணையின்...)
ஓம் ரமணாய நமஹ !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment