Sunday, March 27, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 218. 'பூர்வ புண்ணிய ஸ்தானம்'


 பூர்வ புண்ணிய ஸ்தானம்... ஒரு ஜீவன் சுமந்து கொண்டு வந்திருக்கிற, இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுட்டிக் காட்டுகிறது.

பொதுவாக, இந்தக் 'கர்ம வினைகளின் விளைவுகளை', பாபம் - புண்ணியம் என்ற இரு கூறுகளாகப் பகுத்துக் கொள்ளலாம். 

இதில் 'புண்ணிய பலன்களை, ஜாதகரின் பாக்கிய ஸ்தானத்தையும், பாக்கியாதிபதியையும், அதனோடு தொடர்பு கொண்டுள்ள கிரகம், பாக்கியாதிபதி சாரம் பெற்ற கிரகம்... அவற்றின் தசா - புத்தி - அந்தரங்களைக் கொண்டு ஜாதகர், எப்போது... எவ்வாறு... அனுபவிப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, 'மேஷ லக்னத்திற்கு', 'சிம்ம இராசி', பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 'சூரிய பகவான' பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். 'தனுர் இராசி' பாக்கிய ஸ்தானமாகவும், 'குரு பகவான்' பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். பாக்கிய ஸ்தானத்திலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கியமாக அமைகிறது. இந்த பாக்கியாதிபதியாகிய. 'குரு பகவானின்' ஸ்தானம்... பலம்... அதனோடு தொடர்புடைய கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... என, ஆய்ந்து, அவற்றின் தசா - புத்தி - அந்தரங்களின் வழியாக, ஜாதகர் அனுபவிக்கும் 'புண்ணிய பலன்களை' கணித்தறியலாம். 

அது போல, 'கர்ம வினைகள்' விளைவிக்கும்' பாப வினைகளை, ஜாதகரின் 'அட்டம ஸ்தானத்தை' (8 ஆம் பாவம்), ஆதாரமாகக் கொண்டு ஆய்ந்து அறிந்து கொள்ளலாம். அட்டம ஸ்தானம்... ஸ்தானாதிபதி... இணைந்திருக்கும் கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... அவற்றின் தசா - புத்தி - அந்தரம், இவற்றின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அட்டம ஸ்தானத்திலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானம், 10 ஆம் பாவமாக அமைகிறது. ஒரு ஜீவன் தான் 'மேற் கொள்ளும்' அல்லது 'எதிர் கொள்ளும்' செயல்களின் மூலமாகத்தன், இன்ப - துன்பங்களை அனுபவிக்கிறது. ஆகவே, இந்த அட்டம ஸ்தானத்தின் வாயிலாக, துன்ப விளைவுகளை விளைவிக்கும் 'கர்ம வினைகளை' அறிந்து, அதற்கேற்றாற் போல, அதை எதிர் கொள்ள, இந்தக் கணிப்பு உதவி செய்கிறது.  

உதாரணமாக, 'ரிஷப லக்னத்திற்கு', 'கன்னி இராசி' பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 'புத பகவான்'. ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். அது போல, 'தனுர் இராசி' அட்டம ஸ்தானமாகவும், 'குரு பகவான்' ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். அட்டம ஸ்தானத்திற்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் 'ஜீவன - கர்ம' பாவமாக அமைகிறது. ஆகவே, 'குரு பகவானின்' நிலை... அதனோடு தொடர்பு பெற்றுள்ள கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... தசா - புத்தி - அந்தரங்கள் வழியாக, ஜாதகர் அனுபவிக்கும் துன்ப நிலைகளை வெளிப்படுத்தும், கர்ம வினைகளின் பாப வினைகளை அறிந்து, அதை எதிர் கொள்ளலாம்.

ஸாய்ராம்.






Wednesday, March 9, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 217. ஜோதிடர் கவனிக்க வேண்டிய ஸ்தானம்...


'தர்மம்'... அனைவருக்கும் பொதுவானது. ஆனால், 'நியாயமோ' ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஒருவருக்கு நியாயமாகப் படுவது மற்றொருவருக்கு நியாயமற்றதாக இருந்து விடும் வாய்ப்பு உண்டு.

'துர்வாஸ முனிவர்' தனது நீண்டகாலத் தவத்திலிருந்து வெளி வந்து, மாந்தர்கள் வசிக்கும் பகுதியை நோக்கி நடை போட்டார். அப்போது, அருகே மரத்திலிருந்த ஒரு கொக்கு, அவரின் தலையில் எச்சமிட்டு விட்டது. அந்த கொக்கை அவர் பார்த்தார்... உடனே அந்த கொக்கு எரிந்து விழுந்தது. அவரின் பயணம் தொடர்ந்து, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. பசியிலிருந்த முனிவரின் அழைப்பை ஏற்று, உடனே வர முடியாத சூழலில் இருந்த அந்த வீட்டுத் தலைவி, சற்று தாமதித்து, அவருக்கு உணவளிக்க வந்தார். அவரை கோபமாக ஏறிட்டுப் பார்த்தார் துர்வாஸர். அன்னத்தை அளித்த அந்தப் பெண், 'என்னைக் கொக்கென்று நினைத்தீரோ ? கொங்கணரே !' என்றாள். அவளின் ஞானத்தை உணர்ந்து கொண்ட துர்வாஸர் அமைதியானார்.

இந்த நிகழ்வில், துர்வாஸரின் பார்வையில் தாமதம் என்பது... 'நியாயமற்றதாக' இருந்தது. ஆனால், தனக்கென்றுள்ள கடமைகள முடித்து விட்டு, காத்திருக்கும் முனிவருக்கு உணவளிக்க வந்தது... 'தர்மத்திற்கு' உட்பட்டு இருந்தது. இந்த தர்மத்தை உணர வைப்பதற்காகத்தான், அந்தப் பெண்ணின் 'ஞானம்' முன் நிருத்தப்பட்டிருக்கிறது.

இது போல, தன்னிடம் ஆலோசனைக்காக வரும் ஜாதகரின், ஜாதகத்தை ஆய்ந்து, அவரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்குவதற்கு முன், அந்த ஜாதகரின் 'தர்மம்' என்ற பாக்கிய ஸ்தானமான 9 ஆம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அந்த தர்ம ஸ்தானத்தையும்... தர்ம ஸ்தானாதிபதியையும்... ஆய்ந்து, அதற்கேற்ப தனது ஆலோசனையை வழங்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல ஜோதிடரின் கடமையும் கூட. ஏனெனில்  ஜோதிடக் கலை, தர்மத்தை மட்டுமே உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதன் வழியேதான் ஜீவர்களை வழி நடத்திக் கொண்டும் இருக்கிறது.... மிக சூட்சுமமாக !

ஸாய்ராம்.



Tuesday, March 8, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 216. 'திரிகோணம் உணர்த்தும் சூட்சுமம்'


'ஜோதிடக் கலை'... ஒரு ஜீவனின் 'பிறப்பு முதல் மறைவு' வரையிலான வாழ்வை மட்டுமல்ல, அந்த ஜீவன், 'பரம சொரூபத்திலிருந்து' வேறுபட்டு வந்ததிலிருந்து, மீண்டும் அந்த சொரூபத்தில் சேரும் காலம் வரையிலான சூட்சுமங்களையும் அறிவிக்கும் கலையாக அமைந்திருக்கிறது.

ஆதலால்தான், இந்தக் கலை, 'வேதத்தின்', 'ஆறு அங்கங்களில்' ஒன்றாக வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையை வகுத்தளித்த ரிஷிகள், இந்தக் கலையை தெய்வீக உணர்வுடன் அணுக வேண்டும் என்பதற்காகத்தான், இதைக் கையாள்பவர்களை 'தெய்வக்யஞர்கள்' என்று வகுத்தும் வைத்தனர்.

இதற்குச் சாட்சியாகத்தான், நவக்கிரகங்கள் அமைந்திருக்கிற 'இராசிச் சக்கரத்தை', திரிகோணம் (1,5,9)... கேந்திரம் (1,4,7,10)... உப ஜெயம் (2, 11)... மறைவு (3,6,8,12)... என்பவையான சூட்சும ஸ்தானங்களாக வகுத்தளித்துள்ளனர்.

இதில், 'திரிகோணம்' என்பது ஜீவனின் 'பிறவி இரகசியத்தை' உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 'லக்னம்' என்ற 1 ஆம் பாவம் ஜீவனின்' பிறப்பைப் பற்றியும்... 'பூர்வம்' என்ற 5 ஆம் பாவம் ஜீவனின் இந்தப் பிறப்பிற்கான 'கர்ம வினைகளையும்'... 'பாக்கியம்' என்ற 9 ஆம் பாவம், ஜீவன் அந்த கர்ம வினைகளை எவ்வாறு அனுபவிக்கப் போகிறது என்ற சூட்சுமங்களையும்... உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

ஜீவன் தனக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற வாழ் நாட்களில், இந்தத் 'திரிகோண' அமைவுகள் உள்ளடக்கிக் கொண்டுள்ள சூட்சுமங்களை, எவ்வாறெல்லாம் இந்த 'உலக வாழ்வில்' கடந்து போகப் போகிறது...? என்பதை, கேந்திரங்களும்... உபஜெய ஸ்தானங்களும்... மறைவு ஸ்தானங்களும்...விரிவாக வகுத்தளிக்கின்றன.

'திரிகோணம்' அளிக்கின்ற 'கர்ம வினைகளின் சூட்சுமங்களை' அறிந்து, கேந்திரம், உபஜெயம் மற்றும் மறைவு ஸ்தானனங்கள் வழியாக, நவக்கிரகங்களின் அமைவுகளை மூலமாகக் கொண்டு, உலக வாழ்வில், அந்தக் கர்ம வினைகளைக் களைந்து, அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஒரு பிறவியை எடுத்து விடாமல், தனது மூலமான 'ஈஸ்வர சொரூபமான' பரம சொரூபத்தில் சேர்ந்து விடும் வாழ்வைத்தான், ஜீவன், இந்த உலக வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்.

இதற்கான முன்னறிவைப்பத்தான் திரிகோணம், ஜீவனுக்கு உணர்த்தி அருள்கிறது.

ஸாய்ராம்.


சதாசிவ பிரமேந்திர சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம்...


எட்டுத் திசைகளையும் ஆடையாகத் தரித்திருக்கிற 'கால பைரவரை' போன்றே, எப்போதும் 'திகபம்பரமான' நிலையிலேயே, பரப்பிரம்மம் உலவி வந்தார்.

அவர் ஒரு நாள், இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வரும் பகுதியின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள், சுவாமியை அறிந்திருக்கவில்லை. அந்தப் பகுதியில் இருக்கும் பெண்கள், இவ்வாறு திகம்பரமாக நடந்து செல்பவரைக் கண்டதும், அச்சத்தில் பயந்து அலற ஆரம்பித்தனர். பெண்களின் அலறல் சப்தம் கேட்டு, ஓடி வந்த ஒருவர், 'ஆடைகளின்றி' நடந்து கொண்டிருந்தவரின் மேல் ஆத்திரப்பட்டு, தனது கையிலிருந்த கத்தியைக் கொண்டு, அவரின் கையைத் துண்டித்து விட்டார்.. 

எப்போதும் தன் உள்ளுணர்வான ஆத்மாவிலேயே மூழ்கியிருக்கும் சுவாமிகள், தனது கைகள் வெட்டப்பட்ட உணர்ச்சியே இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து, பயந்து போனது மட்டுமல்ல, ஆச்சரியத்திலும் மூழ்கிப் போன அந்த நபர், 'துண்ட்டாப்பட்ட கையை' எடுத்துக் கொண்டு, சுவாமிகளின் பின்னால் ஓடி, அவர் ஒரு 'அவுலியா' (தெய்வீகப் பெரியவர்) என்பத உணர்ந்து, கண்ணீர்மல்கி, சுவாமிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

இதை ஏதும் அறியாத மகான், அந்த நபர் கையிலிருந்த துண்ட்டாடப்பட்ட தனது கையை வாங்கி, தனது தோளில் ஒட்டிக் கொண்டு, முன்போலவே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

ஸாய்ராம்.

               

Monday, March 7, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 215. 'கனவுகள்' ஒரு ஆய்வு...

இந்தப் புற உலக வாழ்வில்.... மூன்று நிலைகளை நாம் அனுபவிப்பதாக உணர்கிறோம். அவை, விழிப்பு நிலை... தூக்க நிலை.... கனவு நிலை.

இதில் விழிப்பு நிலையை, நாம் இப்போது உலக வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையாகவும்... தூக்க நிலையை, நாம் ஒவ்வொரு இரவிலும் உறங்கி ஓய்வெடுக்கும் நிலையாகவும்... கனவு என்ற நிலையை, நாம் தூக்கத்தில் அனுபவிக்கும் நிகழ்வாகவும்... வரையறுத்துக் கொள்கிறோம்.

வேதாந்தம் இந்த மூன்று நிலைகளையுமே 'ஒரு கனவுதான்' என்று வரையறுத்தாலும்... அன்றாட அனுபவத்தில் நாம் காணும் கனவுகளை ஒதுக்கி விட்டு கடந்து போக முடிவதில்லை. கனவின் இறுதியில் ஏற்படும் விழிப்பு... அந்தக் கனவுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து விடுகிறது.

விழிப்பு நிலையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும், நமது 'பூர்வ வினைகளுடன்' தொடர்புடையாதாக இருக்கிறதோ, அதே போல, பெரும்பாலும் கனவுகளில் நாம் காணும் நிகழ்வுகளும், நமது 'பூர்வ வினைகளுடன்' தொடர்பு உடையதாகவே இருக்கும்.

எவ்வாறு, நமது இயல்பான விழிப்பு நிலையில் நிகழும் பல நிகழ்வுகள், நமக்கு 'விதிக்கப்படாத நிகழ்வுகளாக', நமது ஞாபகத்தில் இருப்பதில்லையோ, அதே போல, நமக்கு ஏற்படும் பல கனவுகளும், நாம் விழித்த உடன், பெரும்பாலும் நமது ஞாபகத்தில் இருப்பதில்லை. இவாறான கனவுகள் அனைத்தையும் 'நினைவுகள்' என்றே கருத வேண்டும்.

அதே போல, நமது வாழ்வில் நிகழும் 'விதிக்கப்பட்ட நிகழ்வுகள்' அனைத்தும் நமது நினைவுகளில் ஆழப் பதிந்து விடுவதைப் போல, கனவு நிலையில் நிகழும் 'விதிக்கப்பட்ட நிகழ்வுகளும்', நமது நினைவுகளில் ஆழப் பதிந்து விடுகின்றன. இவற்றைத்தான் 'காட்சிகள்' எனக் கொண்டு, அது உணர்த்தும் 'உள்ளுணர்வுக் குறிப்புகளை', 'கனவிற்கான பலன்களாக' அறிந்து கொள்கிறோம். 

இவ்வாறான காட்சிகளைக் கனவிலிருந்து எளிதில் பிரித்தறியலாம். இவ்வாறான காட்சிகள் நம்மை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டு விடும்... நம்மையும் அறியாமல், நள்ளிரவானாலும், அதிகாலையானாலும், அந்த நேரத்தைப் பார்க்கத் தூண்டும்.... அந்தக் காட்சிகளின் ஒவ்வொரு அம்சமும் நமது நினைவுகளில், நினைவுகளாகப் பதிந்து விடும்... மீண்டும் தூக்கம் வரும் வரை, அந்தக் காட்சி மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறான கனவுக் காட்சிகளுக்குத்தான் 'பலன்களை' அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் 'கனவுக் காட்சிகள்தான்', நமக்கு சில 'முன்னறிவுப்புகளை' அளித்து உதவுகிறது. இதைத்தான், 'கனவுகளுக்கான பலன்கள்' என்கிறார்கள்.

ஸாய்ராம்.




 

Friday, March 4, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 214. 'குரு பகவான்'


 'குரு பகவான்'... ஜோதிடக் கலையில் ஆர்வமுள்ள அனைவருமே, வியந்து பார்க்கும் ஒரு கிரகமாக இருக்கிறார். நவக்கிரகங்களில் ஒருவராக இருந்தாலும், 'சுபக் கிரகங்களில்' இவர்தான் முதன்மையானவர்.

இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும், இருவகையான வாழ்வை எதிர்கொள்கிறது. அவை, 'உலக வாழ்வு' மற்றும் 'உள் வாழ்வு' என்ற ஆன்மீக வாழ்வு. 

உலக வாழ்வு, முற்றிலும் ஜீவர்களின் 'கர்ம வினைகளை' பொருத்ததாகவே அமைகிறது. அவரவர்களின் 'கர்ம வினைகள்' விளைவிக்கும் விளைவுகளான 'இன்ப - துன்பங்களை' அவை அனுபவித்துக் கடந்து போகின்றன. இந்தக் 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்', ஜோதிடச் சித்திரத்தில் 'நவக்கிரகங்களின் அமைவுகள்' சுட்டிக் காட்டுகின்றன. 'குரு பகவானும்' ஏனைய கிரகங்களைப் போல, தனது 'பாவாங்களுக்கு' ஏற்ப 'கர்ம வினைகளின் விளைவுகளை' அளிப்பதற்குத் தவறுவதில்லை.

ஆனால், 'நிழல் கிரகங்களைத்' தவிர்த்து (ராகு - கேது பகவான்கள்) ஏனைய கிரகங்களுக்கு விதி விலக்காக, 'உள் வாழ்வு' என்ற ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டும் ஒரே கிரகமாக 'குரு பகவான்' மட்டுமே அமைந்து விடுகிறார். இவரின் ஆளுமைதான், ஒரு ஜீவனின் 'உலக வாழ்வு' எப்போது 'உள் வாழ்வின்' பக்கம் திரும்புகிறது... என்பதை நிர்ணயிக்கிறது.

ஏனைய கிரகங்கள் அனைத்தும், அதனதன் உச்சம்... ஆட்சி... நீசம்... என்ற 'கிரக பலத்தையொட்டியும்', அதனதன் பாவம்... ஆதிபத்தியம்... மறைவு...என்ற 'ஸ்தான பலத்தையொட்டியும்'... பலன்களை அளிப்பதுடன் நின்று விடுகின்றன. ஆனால், 'குரு பகவான்' மட்டுமே, அவரது 'கிரக பலம்' எவ்வாறு இருந்தாலும்... அவரது 'ஸ்தான பலம்' எவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு ஜீவனையும் அவரின் 'தசாக் காலத்திலோ'... 'புத்திக் காலத்திலோ'... 'அந்தரக் காலத்திலோ'... உள் வாழ்வின் பாதையில் திருப்பி விடும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்.

ஒரு ஜீவனின் 'பூர்வத்தில்', ஏதாவது ஒரு சிறிய புண்ணிய பலன்... இருந்தாலே போதும், அதைப் பயன்படுத்தி, தனது 'ஹோரா' காலத்திலாவது, அந்த ஜீவனை 'உள் வாழ்வின்' பாதையில் திருப்பி விடுவார். அதைத்தான் 'மௌன தீக்ஷா' என்று அழைக்கிறோம்.

அந்த தீக்ஷையைத்தான், 'சனாதன முனிவர்கள்' நால்வருக்கும், மௌனமாகவே இருந்து அருள் செய்கிறார்... சிவ முர்த்தங்களில்' ஒருவரான 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'. அதனால்தான், நவக்கிரக குருபகவானுக்கு அதிதேவதையாக... 'குரு தக்ஷ்ணாமுர்த்தி பகவானே' அமைந்திருக்கிறார். 

ஆகவேதான், 'குருவருள் இருந்தால் திருவருள் கூடும்' என்பர் பெரியோர்.

குருப் பிரம்மா... குரு விஷ்ணு.... குருத் தேவோ மஹேஸ்வரஹ... குரு சாக்ஷாத்... பரப் பிரம்மா... தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ !'

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...