Tuesday, November 29, 2022

திருக்குறள் உணர்த்தும் ஞானம் : பகுதி - 11. 'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்'


 

'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 

துணைவலியும் தூக்கிச் செயல்'. குறள் : 471.

ஒரு செயலை மேற்கொள்ளும் போது, அந்த செயலின் தன்மையையும், அதைச் செய்யக்கூடிய தனது வலிமையையும், அந்த செயலின் போது நாம் எதிர்கொள்பவரின் வலிமையையும், அந்த செயலுக்குத் துணை நிற்பவர்களின் வலிமையையும் சீர் தூக்கிச் செயல்பட வேண்டும்... என்பதாகத்தான் இதன் பொருள் அறியப்படுகிறது.

ஆனால், தெய்வப் புலவரான வள்ளுவர், 'செயலைப்' பற்றிக் குறிப்பிடும் போது, அதை 'வினை' என்பதாகக் குறிப்பிடுவதை சற்று ஆழ்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஏழு சொற்களை மட்டும் கையாண்டு, ஏழ் கடல்களுக்கு ஒப்பான ஞானத்தை இவரால் மட்டுமே அளிக்க முடியும்.

'வினை' என்பது செயலானாலும்... அது 'நமது பூர்வ கர்ம வினைகளினால்', நல்வினை, தீவினை என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. நமது பூர்வ புண்ணியங்களின் விளைவுகள் நல்வினைகளாகவும்... பூர்வ பாப விளைவுகள் தீ வினைகளாகவும்... அனுபவத்திற்கு வருகின்றன. 

இந்த இருவினைகளும் அதற்கேற்ற சூழல்களை தாமாகவே உருவாக்கிக் கொள்கின்றன. புண்ணிய வினைகள் அதற்கேற்ற சூழல்களை தாமாகவே உருவாக்கிக் கொண்டு, மிக நல்ல விளைவுகளை தந்து விடுகின்றன. பாப வினைகளும் அவ்வாறே, அதற்கேற்ற சூழல்களை உருவாக்கி, மிகக் கடினமான விளைவுகளைத் தந்து விடுகின்றன.

மிகக் கடினமான விளைவுகளைத் தந்து விடுகிற பாப வினைகளைக் கடக்கும் போது, எதிர்கொள்ள வேண்டிய எச்சரிக்கையைத்தான், இந்தக் குறளில் மிக சூட்சுமமாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். 

அந்தக் கடினமான சூழலில், நிச்சயமாக தன்னால் மட்டும் அதை எதிர்கொண்டு விட முடியாது. பாப வினைகளின் கடுமை, அதன் ஒவ்வொரு கட்டங்களிலும் தடங்கல்களையும்... தடைகளையும்... முட்டுக் கட்டைகளையும்... உருவாக்கிக் கொண்டே இருக்கும். அப்போது அதை எதிர் கொள்ள அந்த வினைக்கு ஏற்ப, துணைகளைக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தத் துணைகளைத்தான் வரிசைப்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.

இந்த அறிவுருத்தல், பாப வினைகளைக் கடந்து செல்வோருக்கான 'வினைப் பரிகாரமாக' அமைந்து விடுகிறது.

ஸாய்ராம்.


Saturday, November 26, 2022

திருக்குறள் உணர்த்தும் ஞானம் : பகுதி - 10. 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக'

 


'கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக'       குறள் : 391.

இதற்குப் பொருளாக... 'நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்றக் கல்விக்கு தக்கவாறு நெறியுடன் வாழ வேண்டும்...' என்பதுதான் பொதுவான விளக்கமாக அறிந்து கொள்ளப் படுகிறது.

நல்ல நூல்களைக் கற்பதும்... அதன் கருத்துக்களை உள் வாங்கி... அதன் வழியே நடப்பதும்... எல்லோருக்கும் தோன்றும் கருத்தியல்தான். 

ஆனால், தெய்வப் புலவரான வள்ளுவர், இந்த  கருத்தை கையாளும் போது, 'அணுவைத் துளைத்து... அதில் ஏழ் கடலைப் புகுத்தி... குறுகத் தரித்தக் குறள்' என்ற 'ஔவையாரின்' கூற்றுக்கு ஏற்ப, வள்ளுவப் பெருந்தகையின் எல்லையற்ற ஞானத்தை, மனம் ஆராயத் தூண்டுகிறது.

'கசடற...' என்ற வார்த்தையில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

'நல்ல நூல்கள்' என்பது மனிதர்க்கு மனிதர் வேறுபட்டதாக ஆகிவிடுகிறது. ஞானத்தை வழங்கும் நூல்களும், ஞானம் பெற முயற்சிப்பவர்களும்... உலக அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்களும், உலக அறிவைத் தேடுபவர்களும்... ... நிறைந்து இருக்கும் இந்த உலகில், 'குற்றமற கற்றலும்', 'கற்றபடி நிற்றலும்'... 'எது சரியான நெறி ?' என்ற விவாதத்திற்கு உள்ளாகிவிடும் அபாயமும் இருக்கிறது.

வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டிருக்கும், 'கசடற' என்பது, நூல்களைப் பற்றியதல்ல. அது மனதின் தன்மையைப் பற்றியது. 

எந்த நூல்கள் மனதில் இருக்கும் 'அறியாமை' என்ற மாசை நீக்குகிறதோ, அதைத்தான் வள்ளுவர் நல்ல நூல்களாகக் கொள்கிறார். மனதில் இருக்கும் அறியாமை நீங்கி, மனம் ஞானம் என்ற ஒளியில் திளைக்கும் போது, அது தூய்மையான மனமாக மாறி விடுகிறது. 

இவ்வாறு 'மனதின் கண் இருக்கும் மாசை...' நீக்கும் படியான நூல்களைக் கற்பதும்...  கற்றபின், தூய்மையான மனதுடைய நிலையை அடைந்து...  அந்த நூல்கள் உணர்த்திய ஞானமான வாழ்வை, மேற்கொள்வதுதான்... கற்பதற்கான வழி முறை, என்பதைத்தான், இந்தக் குறளில் மிக சூட்சுமமாகக் குறிப்பிட்டிருக்கிறார், தெய்வப் புலவர்.

ஞானப் பெருந்தகையான 'வள்ளுவப் பெருமானின்'  ஈரடி வெண்பாக்கள், ஏழ் கடல்களுக்கு ஒப்பான சொற்களால் நிரப்பப் பட்டிருக்கிறது. அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியவான்கள்தான்.

ஸாய்ராம்.


கொண்டல் வண்ணனை...


 

'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை 

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே !'


- திருப்பாணாழ்வார் அருளிய பாசுரம்.


ஸாய்ராம்.

Wednesday, November 23, 2022

Can His words ever go false !... மஹா பெரியவருடனான அற்புத அனுபவம்...


 எப்போதும் இவரின் வார்த்தைகள் பொய்த்ததில்லை...

1955, வேங்கடராமன்... சென்னை, மயிலாப்பூர், பி.எஸ் உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனின் தந்தை திரு.வைத்தியநாதன் அவர்கள், அவனுக்கு உபநயனம் செய்விக்க எண்ணினார். அவரது இருக்கமான பொருளாதார சூழலினால், காஞ்சி மடத்தில் நிகழும் 'சமஷ்டி உபநயனத்தில்' கலந்த கொண்டு, 'மஹா பெரியவரின்' அருளாசியுடன், தனது மகனுக்கு உபநயனம் செய்விப்பதற்காக காஞ்சீபுரம் வந்தடைந்தார்.

உபநயனம் நடக்கும் நாட்களில், வெங்கரராமனின் பள்ளி இறுதியாண்டு பரீட்சைகளும் நடந்து கொண்டிருந்தன. ஆதலால், ஓரிரண்டு தேர்வுகளை அவனால் எழுத முடியாமல் போனது. மஹா பெரியவரின் அனுக்கிரகத்தோடு தனக்கு உபநயனம் நிகழ்ந்த சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், பள்ளிக்குச் சென்று மீண்டும் அதே வகுப்பிலேயே அடுத்த ஆண்டும் தொடர வேண்டியிருக்குமே என்ற கவலை, மறுபுறம் அவனை வாட்டியெடுத்தது.

விடை பெறும் நேரம் வந்த போது, அவனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த பெரியவர், 'உனக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டார். வேங்கடராமன், 'இந்த வருட இறுதித் தேர்வில் நான் தேர்ச்சி பெற வேண்டும்' என்றான். அவனை ஆசீர்வதித்த பெரியவர், 'கவலைப் படாதே, நீ தேர்ச்சி அடைந்து விடுவாய்' என்றார். வேங்கடராமனோ, 'அது எப்படி நான் தேர்ச்சி அடைய முடியும், நான்தான், சில பரீட்சைகளை எழுதவே இல்லையே !' என்றான். அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, 'போ, நீ தேர்ச்சி பெற்று விடுவாய் !' என்று மீண்டும் ஆசீர்வதித்தார் பெரியவர்.

ஊருக்குத் திரும்பிய வேங்கடராமனுக்கு, தான் பரீட்சையில் தோவியடைந்த செய்தியும், தொடர்ந்து அதே வகுப்பில் படிக்க வேண்டிய நிர்பந்தமும் வந்து சேர்ந்தது. அவனது விடுமுறை நாட்கள் கவலைகளுடன் கடந்து போனது. பள்ளி மீண்டும் திறக்கும் நாளில், பள்ளிக்குச் சென்ற வேங்கடராமனுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது ! அந்த விடுமுறை நாட்களில், பள்ளியின் ஸ்தாபர்களில் ஒருவரின் மறைவினால், அந்த வருடம் பள்ளி மாணவர்கள் அனைவரையுமே தேர்ச்சியடையச் செய்ய வேண்டும்... என்ற தலைமை ஆசிர்யரின் உத்தரவுதான் அது.

மஹா பெரியவரின், 'போ, நீ தேர்ச்சி பெற்று விடுவாய் !' என்ற, என்றும் மாறாத, சத்திய வார்த்தைகளின் சந்தோஷத்தை அனுபவித்தபடியே, வேங்கடராமன், அடுத்த வகுப்பிற்கு மகிழ்வுடன் சென்றான். 

Can His words ever go false !

ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா முக நூலில் இருந்து தொகுக்கப்பட்டது.

மொழி பெயர்ப்பு... அடியேன்.

ஸாய்ராம்.

Tuesday, November 22, 2022

ஒவ்வொரு நொடியிலும்...


 

ஒவ்வொரு நொடியிலும் நான் துடிக்கின்றேன் - என் 

வினையென்ன செய்திடுமோ தவிக்கின்றேன்.


வருமுன்னர் காப்பதற்கு வழியுமில்லை - வினை

வந்தபின் எதிர்கொள்ளத் துணிவுமில்லை.


விதைத்ததை அறுக்கின்றேன் விளைச்சலில்லை - முன்

விதைத்தது பதரானால் என்ன செய்வேன்.


தனிவழி செல்கின்றேன் துணையுமில்லை - அந்த 

வழிசென்று சேருமிடம் தெரியவில்லை.


மடியின்றித் தவித்திட்ட மழலையின் குரல் கேட்டு

மடிநிறை பாலோடு பரிவுடன் பசுவைப் போல்

இடர்மிகு பயணத்தின் இடை வந்தாய் - என்

துயருக்குத் தொள் கொடுக்கும் துணையானாய்.


துயர் இனி எனக்கில்லை பயமெதற்கு - உன்

பத மலர் தொடர்கின்றேன் ஜெயமெனக்கு !


ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...