'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது,
ஊதியம் இல்லை உயிர்க்கு' - குறள் : 231. புகழ்
வரியவர்களுக்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வேண்டும். அதுவே இந்த உயிருக்கு அளிக்கும் ஊதியமாக இருக்கும், என்பதுதான் இந்தக் குறளுக்கு அளிக்கும் பொதுவான விளக்கமாக அமைந்திருக்கும்.
சற்று இந்தக் குறளை, ஆய்ந்து பார்த்தால்,
- 'புகழ்' என்பது, இறைவனிடம் 'சரணாகதி அடைவதை' குறிக்கும்.
- 'ஊதியம் இல்லை உயிர்க்கு...' என்ற சொற்றொடர் சிந்தனையை தூண்டுவதாக இருக்கும். காரணம் 'ஊதியம்' என்பது 'கூலி' என்பதைத்தான் குறிக்கும். உயிர் என்பது 'ஜீவனாகும்'. அந்த ஜீவன் நிலையற்ற உடலைச் சார்ந்தும்... நிலையான 'ஆத்மா' என்ற பரம்பொருளைச் சார்ந்தும் (ஆத்மா - ஜீவன்(உயிர்) - உடல்) இருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளில், 'ஜீவன்' இந்த 'நிலையற்ற உடலை' சார்ந்து இருக்கும் போது, இந்த உலக வாழ்விற்கான.உடல் உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம், இந்த உடலை வளர்த்து விடுகிறது. அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்ப, இந்த உலகில் அந்த ஜீவர்களின் உடல் வாழ்வும் அமைந்து விடுகிறது.
ஆனால், ஜீவன், நிலையான' ஆத்மாவை சார்ந்து இருக்கும் போது, உடல் சார்ந்த உழைப்பிற்கான ஊதியம், அந்த 'ஆத்ம முன்னேற்றத்திற்கு' உதவிடாமல் போகிறது.
ஆத்ம முன்னேற்றத்திற்கான 'ஊதியம்', இந்த உயிர், அந்த ஆத்மாவான 'இறை சக்தியிடம்', பக்தி கொண்டு சரணடைவதில்தான் இருக்கிறது. அந்த சரணாகதியைத்தான்... 'ஈதல்' என்றும், அந்த இறை சக்தியுடன் இணைந்து வாழும் நிலையான வாழ்வைத்தான்... 'இசைபட வாழ்தல்' என்றும், இதுவே ஜீவனாகிய உயிர்க்கு உண்டான கடமையென்றும்... வரையருக்கிறார், 'தெய்வப் புலவர்'.
ஆம், 'அணுவைத் துளைத்து, அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்' என்ற ஔவைத் தாயாரின் பொன்மொழி, குறள்களில் புதைந்துள்ள பேருண்மைகளை ஆய்ந்து அறிந்துகொள்ளத் தூண்டுகிறது !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment