Monday, October 10, 2022

'தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை... 'திருமூலர்' அருளிய 'திருமந்திரம்' பாடல் - 98.


 

'தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமை யால்இப் பயனறி யாரே'

(திருமந்திரம் : பாடல் - 98)

'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும் மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிடம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 'உள்வாழ்வில்' தாம் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் வருடம் ஒரு பாடலாக வடித்தார்... எனக் கூறப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் அவரின் வாழ்வு பற்றிய இந்தக் கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும் நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தைப் பயிற்சியில் அனுபவிக்கும் போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கைகூடுகிறது.

அது போலவே, இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம்.

தத்துவ ஞானம் உரைப்பது ஒன்றைத்தான்... அது, 'இந்த ஜீவன் உறைந்திருக்கும் உடலுக்குள்ளேயே இருந்து... இந்த ஜீவனுக்கும், உடலுக்கும், அது உலவும் உலகத்திற்கும் மூலமாக இருப்பவனே... இறைவன்!'

ஆகவே, இந்த உடலை விட்டுப் பிரித்துத் தனியாக, அன்னியமாக அந்த இறைவனை வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், இந்த உடலை விட்டு அவர் பிரிந்து விட்டால், நாம் உயிர்வாழ்வதில்லை. அந்த நிலையில் நமக்கு, ஜீவனும் இல்லை... உடலும் இல்லை... இந்த உலகமும் இல்லை.

இந்த தத்துவ ஞானத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள், முக்தி என்ற இறைவனோடு ஒன்று கலந்துவிடும் முயற்சியில் ஈடுபடும் முனிவர்களாக இருந்தாலும்... தேவர்களாக இருந்தாலும்... அதன் பயனை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஜீவனும்... சிவனும்... ஒன்றாகியிருக்கும் தத்துவத்தை... இவர் போன்று அனுபவித்து உணர்ந்த, ஞானிகளால்தான் அருள முடியும்! பெருமானாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'திரு மந்திரங்கள்தாம்'.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...