Tuesday, August 30, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 231. 'கேது பகவானும்' அவருக்கு அதி தேவதையாக இருந்து அருளும் 'விநாயகப் பெருமானும்'


நவக்கிரகங்களிலேயே, 'மோக்ஷக் காரகர்' என்ற உயரிய பதவியை வகிப்பவர் 'கேது பகவான்தான்'. ஆதலால்தான், 'சமஷ்டி' என்ற ஒடுக்கத்தில் இருக்கும் 'ஓங்காரத்தையும்'... 'வியஷ்டி' என்ற விரிவடைந்திருக்கும் 'அ உ ம' என்ற பிரணவ சக்தியையும்... ஒன்றிணைக்கிற ரூபமான 'விநாயப் பெருமானார்', இவருக்கு 'அதி தேவதையாக' அமைந்திருக்கிறார்.

நமக்குள் அந்தப் 'பேருணர்வான சக்தி' அடங்கியிருக்கும் போது... அது, 'ஓங்காரமான' சமஷ்டியாகிறது. எப்போது விரிவடைகிறதோ... அப்போது அது, 'அ உ ம' என்ற பிரணவ பேராற்றலாகி வியஷ்டியாகிறது. இந்த இரண்டு சக்திகளும் இணைந்த வடிவமாகத்தான் 'ஓங்கார ருபத்தில்' விநாயகர் காட்சியளிக்கிறார்.

நமக்குள் இருந்து அருளும் 'பேருணர்வுதான்', நமது 'கர்ம வினைகளால்', ஜீவனாகி, பின்னமடைந்து, இந்த உலக வாழ்வில் பிறப்பு... இறப்பு... என்ற சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அந்த 'உணர்வை' மீட்டெடுத்து, உள் நோக்கிச் செலுத்தி, பேருணர்வில் கொண்டு சேர்க்கும் கடமையைத்தான், 'கேது பகவான்' செய்து கொண்டிருக்கிறார்.

ஆதலால்தான் அவர், 'காலத்தை' குறிக்கும் 'கால புருஷ இராசியில்', முதல் 'சர இராசியாதிபதியாகி'... 'வியஷ்டியாகிய' விரிவடைந்த 'ஆற்றலை' வெளிப்படுத்தும்... 'செவ்வாய் பகவான்' உறைந்திருக்கும் 'மேஷ இராசியில்'... முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (அஸ்வினி) தலைமை வகிக்கிறார். 

'பேராற்றலின் ஓங்கார வடிவமாக இருக்கும், 'இரண்டாவது சர இராசியாதிபதியாகி'... 'சமஷ்டியாகிய' ஓங்காரமாக இருக்கும் ஆற்றலைத் தனக்குள் வைத்திருக்கும்... 'சூரிய பகவான்' உறைந்திருக்கும் 'சிம்ம இராசியில்' முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (மகம்) தலைமை வகிக்கிறார்.

இந்த விரிவடைந்த ஆற்றலையும் (வியஷ்டி)... ஓங்காரமாக ஒடுங்கிய ஆற்றலையும் (சமஷ்டி)... ஒன்றிணைந்து உணரும், 'குரு பகவான்' உறைந்திருக்கும், 'மூன்றாவது சர இராசியான'...  'தனுர் இராசியில்' முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (மூலம்) தலைமை வகிக்கிறார்.

ஒரு தேர், அதன் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர வேண்டுமெனில், அதற்குத் தகுந்த இடங்களில் முட்டுக்கட்டைகள் போட வேண்டியிருக்கிறது, அது போல, இந்த ஜீவன், அதன் புறப்பட்ட மூலத்திற்கு வந்து சேருவதற்கான முட்டுக்கட்டைகளை போடுபவர்தான், 'கேது பகவான்'. 

ஆதலால்தான் 'மோக்ஷத்திற்கு' வழி காட்டும் 'மோக்ஷக் காரகர் ' என்று 'கேது பகவானையும்',,, அவருக்கு 'அதி தேவதையாக' தடைகளைத் தகர்த்துவிடும் 'விக்னேஷ்வரராகிய' விநாய பகவானையும்... வகுத்தளித்திருக்கிறார்கள் 'ரிஷி புங்கவர்கள்'.

'கேதுத் தேவே... கீர்த்தித் திருவே,

பாதம் போற்றி... பாபம் தீர்ப்பாய்,

வாதம், வம்பு, வழக்குகள் இன்றி...

கேதுத் தேவே... கேண்மையாய் இரட்சி !'


'அல்லல்போம்... வல்வினை போம்...

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்...

போகாத துயரம் போம்... நல்ல

குணமதிக மாமருணை கோபுரத்தின் மேலிருக்கும்

செல்வக் கணபதியைக் கை தொழுதக்கால் !'


ஸாய்ராம்.

 

Monday, August 29, 2022

விநாயகர் சதுர்த்தி - 2022.


'கஜமுகாசுரன்' என்ற வலிமை மிக்க அசுரன், மிகக் கடுமையாக தவமியற்றி, 'ஈஸ்வரரிடம்' சாகாவரம் கேட்டான். அதைப் பெற முடியாத நிலையில், தேவர்களாலும்... மூவர்களாலும் (சிவன் - பெருமாள் - பிரம்மன்)... பூதங்கள் மற்றும் விலங்குகளாலும்... அஸ்த்திரங்களாலும்... பிறவற்றாலும் தனக்கு மரணம் ஏற்பட்டு விடக்கூடாது... என்ற வரத்தைப் பெற்றான்.

வரம் பெற்ற அசுரர்களின் வாழ்வு எவ்வாறாக முடிந்தது... என்று அறிந்திருந்தும், ஏனைய அசுரர்கள் சென்ற பாதையிலேயே, இவனும் சென்று... வானுலகத்தில் மட்டுமல்ல... வையகத்தில் வாழ்வோருக்கும் எண்ணற்ற துன்பங்களை விளைவித்தான். தன்னை வணங்காதவர் எவரானாலும்... அவரைச் சிறைப்பிடித்து, காலையிலும், மாலையிலும் தனக்கு எதிரே, ஆயிரம் தோப்புக் கரணங்களைப் போடவைத்தான்.

கஜமுகாசுரனால் துன்பப்பட்ட அமரர்கள், 'உமாதேவித் தாயார் சமேத சிவபெருமானாரிடம்' சென்று முறையிட்டனர். கஜமுகாசுரனை வதம் செய்வதற்குத் தக்கக் காலம் கனிந்திருப்பதை உணர்ந்த பார்வதித் தாயார் சமேத சிவபெருமானார், 'சமஷ்டியாகவும்' (ஓம்)... 'வியஷ்டியாகவும்' (அவும) இருக்கும் 'பிரணவத்தைத் தொகுத்து', ஒரு வடிவமாக்கினார்கள். அதுவே 'விநாயகப் பெருமானாரின்' அவதாரமானது (விநாயகர் சதுர்த்தி)..

விநாயப் பெருமானாரை முன்னிட்டுச் சென்ற சேனைகள் கஜமுகாசுரனின் சேனைகளை எல்லாம் அழித்தது. விநாயகரின் ஆயுதங்களால் அழிந்தாலும்... மீண்டும், மீண்டும் உயிர்த்தெழும் அசுரனை, இறுதியாகத் தனது 'கொம்பில்' ஒன்றை ஒடித்து ஏவ, பயந்து ஓடிய கஜமுகாசுரன், ஒரு 'எலி' உருவை எடுத்து வந்து, விநாயகரிடம் சரணடைந்தான். சரணடைந்தவன் மீது கருணை பொழிந்து, அவனைத் தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்.

தங்களது இடர் தீர்த்த பெருமானை வணங்க வந்த தேவர்கள், 'பெருமானே ! எங்கள் இடரகளைக்க் களைந்தவரே! இதுவரை நாங்கள் கஜாமுகாசுரனுக்கு அடிமைப்பட்டு, ஆயிரம் தோப்புக்கரணங்கள் இட்டு வந்தோம், எங்கள் துயரைத் தீர்த்து அருளிய உங்களுக்கு, நாங்கள் இனிமேல் அந்தத் தோப்புக்கரணங்களை இட்டு வணங்கிடும் வரத்தை அருளிட வேண்டும்'... எனக் கேட்க, கணநாதர், 'உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்... ஆனால் மூன்றே மூன்று தோப்புக்கரணங்களே போதும் !' என்று அருளினார்.

'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலுமே எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !'

ஸாய்ராம்.

ஞான தீபம்.


'அகல்' என்பது நமது உடல்... அதில் நிறைந்திருக்கும் 'எண்ணை', இந்த உடல் மூலமாக வாழும் வாழ்க்கைக்குக் காரணமான 'கர்மம்'... அதிலிடப்படும் 'திரி' , 'பூர்வ ஜென்ம வாசனை'.

இந்த உடலுடனான வாழ்வுக்குக் காரணமான 'கர்மா'... இந்த உடலுக்கு உயிரோட்டத்தை அளிக்கும் 'ஜீவசக்தியான மனதிலிருந்து உதிக்கும் 'நான்' என்ற 'அஹங்காரமான வாசனையின் மூலமாக 'பந்தத்தையும்'... 'எனது' என்ற பற்றையும் உருவாக்கிக் கொண்டு... இந்த உலகில் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கக் காரணமாகிறது.

இந்தப் பிறப்புச் சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில்... அந்த அஹங்காரத்தை வேரறுக்க வேண்டும். எப்படி ?

'எனது' என்ற பற்றிலிருந்தும்... 'நான்' என்ற பந்தத்திலிருந்தும்... விடுதலை பெற வேண்டும். அதற்கு இந்த 'அஹங்காரத்தை' அதன் மூலமான 'மனதிலும்'... மனதை அதன் மூலமான 'ஜீவனிலும்'... ஜீவனை அதன் மூலமான 'ஆத்ம சொரூபத்திலும்... நிலைத்து விடச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறப்புக்கு மூலமான 'கர்மா', 'அந்த சுயஜ் ஜோதிப் பிரகாசத்தில்' முற்றிலுமாக எரிந்து போகும். இறப்பிலிருந்தும்... பிறப்பிலிருந்தும்... விடுதலை பெறும்,

இதை உணர்த்துவதற்காகத்தான் 'அஹங்காரம்' என்ற 'திரியை'... 'ஆத்மா' என்ற 'ஜோதிப் பிரகாசத்திற்கு' உட்படுத்துகிறோம். இந்த 'ஜோதிப் பிரகாசம்', முதலில் 'அஹங்காரம்' என்ற 'திரியில்தான்' ஏற்றப் படுகிறது. அது படிப்படியாக 'அஹங்காரத்தின்' மூலமான 'கர்மா' என்ற 'எண்ணையையே' எரித்து விடுகிறது.

இப்போது 'திரி' என்ற 'அஹங்காரமும்' இல்லை... 'கர்மா' என்ற பிறப்புக்கான 'காரணமும்' இல்லை. எஞ்சி இருப்பது 'உடல்' என்ற 'அகல்' மாத்திரமே. அது மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகிறது. இனி 'இறப்பு' இல்லை... அதனால் மிண்டும்'பிறப்பும்' இல்லை.

இந்த சூட்சுமத்தை உணர்த்துவதற்காகத்தான்,,, தீபம் ஏற்றி வழிபாடு செய்யத் தூண்டினர்,,, பெரியோர் !

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...