Saturday, September 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 196. 'பதவி பூர்ய புண்யானாம்...' ல் அடங்கியுள்ள சூட்சுமம்...


 'ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலஸம்பதாம்

பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்திரிகா'

( பிறவியும், பிறந்த குலமும், பிறவி முழுவதும் அனுபவிக்கும் அனுபவங்களும், அந்தந்த ஜீவர்கள் சுமந்து கொண்டு வந்திருக்கும் பூர்வ புண்ணியங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன... இதை அறிந்து கொள்வதற்காகவே, இந்த 'ஜனன கால பத்திரிக்கை' எழுதப்படுகிறது )

இதில், பிறவியும்... அதன் குலமும்... முதலில் நமது அறிவிற்கும், பின் நமது அனுபவத்திற்கும் உட்பட்டதாகிறது. 

ஆனால், 'பூர்வ புண்ணியம்', நமது அனுபவத்திற்கு மட்டுமே உட்படுகிறதே தவிர, அந்த அனுபவத்திற்கு முன் அறியக் கூடிய அறிவிற்கு உட்படுவதில்லை.

ஆதலால்தான், நமது வாழ்வில் நிகழும் 'காரியங்கள்' மட்டுமே நமக்கு அனுபவமாகின்றன. அந்த ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் 'காரணங்களை' நாம் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம்.

இந்த 'சூட்சுமத்தைத்தான்', ஜாதக சித்திரத்தில் அமைந்திருக்கிற '5 ஆம் பாவம்' என்ற 'பூர்வ புண்ணிய ஸ்தானம்' நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. 

'பதவி' என்றதுமே, நமக்கு '10 ஆம் பாவம்தான்' கண்முன் வந்து நிற்கும். ஆனால், இந்த '10 ஆம் பாவத்திற்கும்' (கர்ம ஸ்தானம்)... '5 ஆம் பாவத்திற்கும்' (பூர்வ புண்ய ஸ்தானம்)... ஜோதிட சித்திரத்தில் நேரடி தொடர்பு இல்லை. மாறாக...

* 5 ஆம் பாவத்திற்கு நேரெதிரில் 11 ஆம் பாவமான 'லாப ஸ்தானமும்...

* 10 ஆம் பாவத்திற்கு நேரெதிரில் 4 ஆம் பாவமான 'சுக ஸ்தானமும்தான்... அமைந்திருக்கிறது.. 

இந்த சூட்சும அமைவு எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால்...

'நமது 'சுக சௌகரியங்களைப்' (4 ஆம் பாவம்) பற்றியும், அதனால் விளையும் 'லாபங்களை' (11 ஆம் பாவம்) பற்றியும் கவலைப்படாமல், 'காரியங்கள்' என்ற 'கடமைகளை' (10 ஆம் பாவம்) பற்றற்ற மனதோடு செய்யும் போது... 'பூர்வ புண்ணியம்' (5 ஆம் பாவம்) உள்ளடக்கியிருக்கிற 'காரணங்கள்' என்ற 'வினை மூட்டையைப்' பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை... என்ற உண்மையைத்தான்.

இப்போது புரியும்... 'பதவி' என்பது ;

* தன்னைப் பெற்றெடுத்தவரகளுக்கு, புத்திரன் அல்லது புத்திரியாக...

* உடன் பிறந்தோருக்கு சகோதர, சகோதரியாக...

* வாழ்க்கைத் துணைக்குத், துணைவராக அல்லது துணைவியாக...

* குழந்தைகளுக்கு பெற்றோராக...

இவற்றுடன் :இணைந்ததுதான்...'ஜீவனம்' என்ற பொருளீட்டலுக்கான முயற்சியில் கடந்து போகும், 'பதவிகளும்'..

ஸாய்ராம்.



Wednesday, September 8, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 195. 'யோகங்களும் - தோஷங்களும்'


கிரகங்களின் சேர்க்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை 'யோகங்கள் என்றும்... தோஷங்கள் என்றும்...' வகைப்படுத்துகிறது, ஜோதிடக் கலை.

யோகங்கள் என்னும் போது மலர்ந்து விடும் மனங்கள், தோஷங்கள் எனும் போது குவிந்து விடுகின்றன.

இந்த இரண்டு நிலைகளும், நமது 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' சுட்டிக் காட்டுகின்றன.

எந்தெந்த பாவங்களில் யோகங்கள் ஏற்படுகிறதோ... அந்தந்த பாவங்களின் வழியாக, அந்த ஜீவன் தனது 'கர்ம வினைகளின்' புண்ணிய பலன்களை அனுபவிக்கிறது. அது போலவே, அந்தந்த பாவங்களின் வழியாக, தோஷங்கள் என்ற தனது கர்ம வினைகளின் பாபங்களையும் அனுபவிக்கிறது.

இந்த உலக வாழ்விலேயே திளைத்து... இனபம் என்ற ஒன்றை மட்டுமே இடைவிடாது... அனுபவிக்கத் துடிக்கிறது மனித மனம். அதற்காக யோகங்களைப் பெருக்கிக் கொள்வதற்கும், தோஷங்களிலிருந்து விடுபடுவதற்கும் தொடர்ந்து முயற்சிக்கிறது.

ஆனால், இந்த இரண்டு முயற்சிகளுமே... மீண்டும், மீண்டும் நம்மை பிறவிகளின் சுழற்சிக்கு உள்ளேயே தள்ளி விடுவதை... மட்டும் மறந்து விடுகிறது.

எப்போது, நமது துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோமோ... அப்போதே, நமது இன்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சமமாக எதிர்கொள்ளும் பக்குவத்தையே 'ஞானம்' என்ற பக்குவப்படல் நமக்கு உணர்த்துகிறது.

உதாரணமாக...

'தர்ம - கர்மாதிபதி யோகம்', 10 ஆம் பாவத்தில் ஏற்படும் போது, அவர் தொழில் மற்றும் வியாபாரங்களினால், பெரும் பொருள் சேர்க்கும் வல்லமையைப் பெறுகிறார். தனது வாழ் நாள் முழுவதுமாக அந்த விருத்தியிலேயே செயல் படுவதால், பெயர்... புகழ்...என்ற வட்டத்திற்குள் சிக்கி, போட்டிகள் நிறைந்த உலகத்தில் தன்னை நிலை நிருத்திக்கொள்ள வாழ்நாட்கள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. 

'கேந்திராதிபத்திய தோஷம்', 10 ஆம் பாவத்தில் ஏற்படும் போது, அவரால் நிலையான தொழிலையோ, வியாபாரத்தையோ தொடரும் வல்லமையை இழந்து விடுகிறார். தனது வாழ்நாள் முழுவதுமாக, தனது பெயர்... புகழை... எல்லாம் இழந்துவிடாமல் இருப்பதற்காகவே ஓய்வில்லாமல் போராட வேண்டியிருக்கிறது

இந்த இரண்டு நிலைகளுமே நம்மை, நிம்மதியை இழக்க வைப்பதாக இருப்பதை, உணர்ந்து கொள்ள முடிகிறது.

எப்போது, 'தர்ம கர்மாதி யோகம்' பெற்றவரோ அல்லது 'கேந்திராதிபதி தோஷம்' பெற்றவரோ...தங்களது கடமைகளையும்... தேவைகளையும்... காலங்களையும்... தங்களது கவனத்தில் கொண்டு செயல்களை முன்னிருத்த ஆரம்பிக்கிறார்களோ... அப்போதே, தங்களது 'கர்ம வினைகளின் கட்டுகளிலிருந்து' தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

இந்த உபாயத்தைதான் ஜோதிடக் கலை, கிரகங்களின் சேர்க்கைகளைக் கொண்டு, யோகங்களாகவும்... தோஷங்களாகவும்... நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

ஸாய்ராம்.


Wednesday, September 1, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 194. 'செயல்களுக்கும், விளவுகளுக்கும் இடையே இருப்பது எது ?


இந்த 'உலக வாழ்வை' வாழும் ஒவ்வொரு ஜீவனும், நித்தியமான... இடைவிடாத... ஆனந்தத்தைத்தான் நோக்கித்தான்... பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அது போன்ற 'இடைவிடா ஆனந்தம்' எவருக்குமே கிடைப்பதில்லை.

இன்பமும்... துன்பமும்... மாறி மாறி வருவதான வாழ்க்கை அனுபவம்தான் அனைவருக்கும் கிடைக்கிறது. அதற்காக, மனிதன் என்றுமே தனது முயற்சிகளை கை விட்டுவிடுவதில்லை.

முயல்வது என்பது, வாழ்க்கையை கடந்து, அதன் இலக்கை அடைவதற்கான பயணம்தான்.என்றாலும், அந்த முயற்சிகளுக்கான பலன்கள், 'நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை' எனும் உண்மையைத்தான் மறந்து விடுகிறோம்.

உதாரணமாக, ஒரு 'வில் வீரனின்' கைகளில் வலிமையான 'வில்லும்', 'கூரிய அம்புகளும்' இருக்கலாம். அவனுக்கு எதிரில் அந்த அம்புகளுக்கான 'இலக்கும்' இருக்கலாம். அவன், மிகக் கவனமாக, தனது அம்பை, அதன் இலக்கின் மையத்தை நோக்கிக் குறி வைக்கலாம். 

ஆனால். அவன் கைகளிலிருந்து கிளம்பும் வரையில்தான், அந்த அம்புக்கான கட்டுப் பாடு அவன் வசம் இருக்கும். எப்போது, அந்த அம்பு அவனது விரல்களிலிருந்து விடுபடுகிறதோ, அப்போதே அது அவனது கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுபட்டு விடுகிறது. விடுபடும் அம்பு, இலக்கின் எந்தப் புள்ளியில் தைக்கப் போகிறது என்பதை இவனால் தீர்மானிக்க முடியாது. 

அம்பு, அதற்கான இலக்கைத் தானாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது ஒரு பார்வையாளனாக இருந்து, இவனால் பார்க்க மட்டுமே முடிகிறது.

இவ்வாறு, நமது முயற்சிகளுக்கும்... பலன்களுக்கும்... இடையே, நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடாத 'சூட்சும சக்தியைத்தான்'... 'கர்ம வினைகள்' என்று கூறுகிறோம்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 193. 'ஜோதிட ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில Tips'


 1. படைப்பவன் என்ற 'பரம சூத்திரதாரியிடமிருந்து' வெளிப்பட்ட அனைத்தும் மீண்டும், அந்த படைப்பிற்குள்ளேயே அடங்கிவிட வேண்டும் என்பதே... உலக வாழ்வின் இரகசியம். இந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் உன்னதக் கலைதான்... 'ஜோதிடக் கலை'.

2. வேதத்தில் குறிப்பிட்டுள்ள 84 லட்ச வகை உயிரினங்களில், ஏனைய உயிரிங்கள் அனைத்திற்கும், அவையவைகளின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, 'பிறவியும்... வாழ்வும்...' வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய அல்லது விடுவித்துக் கொள்ளக் கூடிய வல்லமை, அவைகளுக்கு வழங்கப்படவில்லை.

3. மனிதப் பிறவியும், அதன்'கர்ம வினைகளின் விளைவுகளால்' அமைந்திருந்தாலும், அந்தக் 'கர்ம வினைக கட்டுகளிலிருந்து' தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய வல்லமை, இந்தப் பிறவிக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான், 'தேர்ந்தெடுக்கும் வல்லமை'.

4. மனிதர்களாகிய நாம், நமது 'கர்ம வினைகளின் விளைவுகளை' இரண்டு விதமாக அனுபவிக்கிறோம்.ஒன்று, 'நாம் மேற்கொள்ளும் செயல்களால்...' இரண்டு, 'நாம் எதிர்கொள்ளும் செயல்களால்...' இந்தக் 'கர்ம வினைகளின் சூட்சுமங்களை' வெளிப்படுத்தும் கலைதான்... 'ஜோதிடக் கலை'.

5. 'நாம் எதிர் கொள்ளும் சூழலுக்கு ஏற்ப', நாம் வெளிப்படுத்த வேண்டிய செயலையும்... 'நமது சூழலுக்கு ஏற்ப' நாம் மேற்கொள்ள வேண்டிய செயலையும்... 'செய்யக் கூடிய அல்லது செய்யாமலிருக்கக் கூடிய...' வாய்ப்பைத்தான் (Choice and Chance), நமக்கு அருளியிருக்கிறான்... படைப்பாளன்.

6. நமக்கு 'விதிக்கப்பட்ட செயல்களைச்' செய்வதும்... 'விதிக்கப்படாத செயல்களிலிருந்து' விலகியிருப்பதும்... என்ற நோக்கத்தோடு செயல்படும் போது, நம்மையறியாமலேயே, 'கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து' நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.

7. இந்த சூட்சுமத்தைத்தான், ஜோதிடக் கலை வகுத்தளித்திருக்கிற 'ஜாதகச் சித்திரம்', அதில் அமைந்திருக்கிற 'கிரகங்களின் அமைவுகள்' மூலம் சுட்டிக் காட்டுகிறது.

8. பிறவியை 'லக்னம்' என்ற 1 ஆம் பாவமாகவும்... 'கர்ம வினைகளின் தொகுப்பை' 'பூர்வ புண்ணியம்' என்ற 5 ஆம் பாவமாகவும்...  இந்த ஜென்மாவில் அனுபவிக்கக் கூடிய அனுபவங்களை 'பாக்கியம்' என்ற 9 அம் பாவமாகவும்... 'திரி கோணம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.

9. அது போலவே, 'லக்னம்' என்ற 1 ஆம் பாவத்தைக் குறிக்கிற ஜீவன், இந்த உலக வாழ்வில் அனுபவிக்க்க கூடிய 'சுக - துக்கங்களை' 4 ஆம் பாவத்தின் மூலமும்... அது ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தொடர்புகளை 7 ஆம் பாவத்தின் மூலமும்... அது, மேற்கொள்கிற அல்லது தவிர்த்து விடுகிற 'கடமைகளை' 10 ஆம் பாவத்தின் மூலமும்...' கேந்திரம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.

10. ஜீவன் அனுபவிக்கக் கூடிய வினைகளுக்கு ஏற்ப அமையும் வாழ்வின் நிலையை 2 ஆம் பாவமும்... அதனால் விளையயும் லாப நஷ்டங்களை (இன்ப - துன்பங்களை) 11 ஆம் பாவமும்... 'பண பரம்' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.

11. தனது கர்ம வினைகளை அனுபவிக்கும் ஜீவன், அதன் வாழ்வை எதிர் கொள்ளக் கூடிய தைர்யத்தை, 3 ஆம் பாவத்தின் மூலமும்... அது எதிர் கொள்ளும் வினைகளை 'ருண - ரோக - சத்ரு' என்ற 6 ஆம் பாவத்தின் மூலமும்... அந்த ஜீவனுக்கான வாழ் நாட்களை 8 ஆம் பாவத்தின் மூலமும்... அதன் கர்ம வினைகளின் கழிவுகளை விரயம் என்ற 12 ஆம் பாவத்தின் மூலமும்... 'மறைவு' என்ற அமைவைக் கொண்டு விவரிக்கிறது.

12. மேற்கண்ட 'திரி கோணம் (1,5,9) - கேந்திரம் (1,4,7,10) - பண பரம் (2,11) - மறைவு (3,6,8,12)' என்ற அமைவுகளில் அமைகின்ற 'நவக் கிரகங்களின்' அமைவுகளைத்தான் 'ஆதிபத்தியங்கள்' என்று விவரிக்கிறது. 

13. அந்தந்த 'ஆதிபத்தியங்களுக்கு' ஏற்ப, அமைகின்ற கிரகங்களின் அமைவுகளைக் கொண்டு (ஆட்சி, உச்சம், நீசம்,பகை நட்பு) ஜீவனின் வாழ்க்கைப் பாதையை (தசா - புத்தி - அந்தரங்கள்) அறிந்து கொண்டு, அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்கிற யுக்தியைத்தான், இந்த 'ஜொதிடக் கலை' நமக்கு வகுத்தளித்திருக்கிறது.

ஸாய்ராம்.



ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...