நாம் அன்றாடம் அனுபவிக்கும் மூன்று அவஸ்தைகள்... ஆழ்ந்த தூக்கம், கனவு, விழிப்பு .
'ஆழ்ந்த தூக்கத்தில்' நாம் ஒன்றும் உணர்வதில்லை. ஏனெனில் நமது உணர்வு, அந்தப் பேருணர்வுடன் ஒன்றி விடுகிறது.
'விழிப்பு நிலையில்', நமது மனம் வெளியே பிரவேசித்து விடுகிறது. நாம் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செய்ல்களில் மனம் தொடர்ந்து ஈடுபடுவதால், நம்மை, நமது உள்ளுணர்வை, நம்மால் கவனிக்க முடியாமல் போகிறது.
இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான் 'கனவு நிலை'. இதை மனம் தொழில் விட்ட நிலை என்று கூறலாம். உடல்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர, மனம் ஓய்வாக இருப்பதில்லை. அதில் தோன்றுவதைத்தான் 'கனவு' என்று கூறுகிறோம்.
இந்தக் கனவுகளை இரண்டு பொதுப் பிரிவுகளாக... 'காட்சிகள்' எனவும்... 'நினைவுகள்' எனவும்... பிரித்துக் கொள்ளலாம்.
'நினைவுகள்' என்பது, நமது 'மனம் தொழில் விட்ட சூழலில்'... அன்றாடம் நாம் கடந்து போகும் நினைவுகளை அசை போட்ட வண்ணம் இருக்கும் நிலை. தொடர்ந்து நமது எண்ணங்கள் போலவே மாறிக் கொண்டே இருக்கும் இந்தக் கனவுகள், நாம் விழிக்கும் போது, நமது ஞாபகத்தில் இருப்பதில்லை.
'காட்சிகள்' என்பதுதான்... கனவின் ஒரு அற்புத நிலை. இது நமது மனம் அன்றாடம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் 'மனம் விட்டத் தொழில்களை' விட்டு விட்டு, மனம் நினைத்தே பார்க்காத... 'ஒரு காட்சித் தொகுப்பைக்' காட்டும். அந்தக் காட்சித் தொகுப்பைத்தான், உண்மையான 'கனவு' என்று கூறுகிறோம்.
இந்தக் 'காட்சித் தொகுப்பு' என்ற கனவினைக் கண்டு முடித்த பின், நாம் விழித்துக் கொள்வோம். உடனடியாக நாம் செய்யும் இரண்டு செயல்கள்.. ஒன்று கடிகாரத்தைப் பார்ப்பது, இரண்டாவது, தண்ணீர் குடிப்பது. அதற்குப் பின், நெடு நேரம் அந்தக் காட்சியையே நினைத்துக் கொண்டிருந்து விட்டு, தன்னையறியாமல் உறங்கிப் போவோம்.
இது போன்ற 'காட்சிகளாலான தொகுப்பைத்தான்' கனவு என்கிறோம். 'இது நமது ஜீவனுக்கு, ஆத்மா உணர்த்துகிற ஒரு அறிவிப்பு'. இந்த கனவு நிலைக்குத்தான், கனவிற்கான பலன்களை' அளிக்கிறோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment