யோகம், என்பது சேர்க்கை.
'உலக வாழ்வுக்கு' ஆதாரமாக இருக்கும் 'உடலுடன்', 'ஜீவன்' ஒன்றும் போது... அந்த சேர்க்கை, ஜீவனை 'உலக வாழ்வில்' ஆழ்த்திவிடுகிறது.
அதுவே, என்றும் நிலைத்திருக்கும் 'ஆத்மாவில்', 'ஜீவன்' ஒன்றும் போது... அந்த சேர்க்கை, ஜீவனை 'உள் வாழ்வு' என்ற 'ஆத்ம ஞானத்தில்' ஆழ்த்திவிடுகிறது.
எவ்வாறு, உலக வாழ்வுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கிறோமோ... அது போல உள் வாழ்வு என்ற ஆத்ம ஞான வாழ்வுக்கும், எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
எல்லாவித உலக வாழ்வுக்கான முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது 'புத்திசாலித்தனம்'. அதற்கு மூலமாக இருப்பது 'அறிவு'. அதுபோல, ஞான வாழ்விற்கு ஆதாரமாக இருப்பது 'ஞானம்'. அதற்கு மூலமாக இருப்பது 'பக்தி' இந்த பக்தியைத்தான், யோக சாதனைகள் என்ற உள் வாழ்வுப் பயணத்தின் முதல் படியாக, 'இயமம்' என்ற யோக சாதனையாகக் கொள்கிறது 'அட்டாங்க யோகம்'.
இந்த ஜீவனின் பிறப்புக்கு மூலமாகவும்... அதன் 'கர்ம வினைக்ளைக் களைவதற்கு' ஆதாரமாகவும்... ஜீவனின் வாழ்வு முழுவதுக்கும், ஒரு சாட்சியாகவும்... ஜீவனை மீண்டும் தனக்குள்ளேயே ஒன்றிவிடச் செய்யும் ஞானத்தை அருள்பவராகவும்... இருப்பவதான், 'பரம் பொருளான இறைவன்'. அவர் மீது வைக்கும், அன்பும்... விசுவாசமும்... நம்பிக்கையும்தான்... பக்தி என்ற உன்னத யோகத்தின் முதல் படியாகிறது.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்... நமக்கு, இந்த அரிய மானுடப் பிறப்பை நல்கியவரின் மீது, நாம் வைக்கும் அன்பே... பக்தியாகக் கனிந்து... அதுவே, அவரை அடையும் 'யோக வாழ்வின்', முதல் படியான 'இயமமாகிறது'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment