ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே,
அருணையில் அசலமாய் அமர்பவள் நீயே,
அடி முடி அறிந்திடா அடியவர் மனதினில்,
அருந்தவ தபசியாய் உறைபவள் நீயே... ! (ஆதியும்.... )
வினைகளின் சுமையை சுமந்திடும் அடியவர்,
தொடர்ந்திடும் பிறவியின் தொடர் அறுப்பாயே,
இருளினில் தனிமையில் தவிப்பவர் மனதினில்,
உள்ளொளியாக உறைபவள் நீயே... ! (ஆதியும்... )
புலன் வழியாக புறம் செல்லும் மனதினை,
அகத்தினில் இருந்து இழுப்பவள் நீயே,
மனத்தினில் தோன்றும் வினைகளின் விளைவை,
முளைவிடும் முன்னே முறிப்பவள் நீயே... ! (ஆதியும்... )
கடமைகள் யாவும் கடந்திங்கு போக,
கருவியாய் என்னை மாற்றிடு தாயே,
தாமரை போலே நிரினில் வாழும்,
நிலையதை எனக்கு அருளிடு நீயே... ! (ஆதியும்... )
உள்ளொளி காட்டி உணர்வினை ஊட்டி,
இருமையை அழிக்கும் அருள் பெரும் சுடரே,
நானென்பதழிந்து தான் என்பதாகி,
தன்னுள் நிலைக்கும் நிலை அருள்வாயே... ! (ஆதியும்... )
(தாயாரின் அருளினால்... 28.8.2019 அன்று உருவான பாடல்... )
ஸாய்ராம்.
No comments:
Post a Comment