Monday, June 15, 2020

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 7. 'பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.





'பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.'     (அதிகாரம் : 'கடவுள் வாழ்த்து' : குறல் எண்-10)

'இறைவனின் மீது பக்தி கொள்பவர்கள், இந்தப் பிறவியைக் கடந்து அவரது திருவடிகளை அடைகிறார்கள்.'... என்பதுதான் இந்தக் குறளுக்கு பொதுவாக வழங்கும் கருத்தாக அமைகிறது.

இந்தக் குறளைச் சற்று ஆய்ந்தால், 'பிறவியை'... 'பெருங் கடலுக்கு' ஒப்பாகக் கூறுவது புலனாகும்.

நாயன்மார்களும்... ஆழ்வாராதிகளும், 'கோடிக்கணக்கான பிறவியைக் கடந்தே ஒரு ஜீவன் கடைத் தேற்றம் பெறுகிறது' என்பதை வலியுருத்தி இருக்கிறார்கள். அந்தக் கோடிக்கணக்கான பிறவிகளைத்தான்... பெருங் கடல், என்பதாக வருணிக்கிறார்.

தனது முந்தைய பிறவியின் 'கர்ம வினைகளைச்' சுமந்து கொண்டு... இந்தப் பிறவியை அடையும் ஜீவன், அந்தக் 'கர்மவினைகள்'... விளைவிக்கும் விளைவுகளையே... ஒவ்வொன்றாக அனுபவிக்கிறது. அந்த வினைகளுக்கு இப் பிறவியில் ஜீவன் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப... மீண்டும் பிறவியை அடைகிறது. இவ்வாறு, ஜீவன் தனது பிறவிகளை நீட்டித்துக் கொண்டே போகிறது. இதைத்தான்... பெரும் கடல், என்பதற்கு ஒப்பாகக் கூறுகிறார்.

ஒரு கடலை நீந்திக் கடப்பது என்பது... முடியாத காரியம். அதிலும் ஒரு பெரும் கடல் என்ற அகண்ட சமுத்திரத்தை நீந்திக் கடப்பது என்பது முடியவே முடியாத காரியமாகிவிடும். ஆனால், அந்தக் கடலில் வீழ்ந்த ஒருவன், அதை நீந்தித்தான் கடக்க வேண்டுமெனில், முயற்சித்து... முயற்சித்து... கடக்க முடியாமல் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புதான் உருவாகும்.

அதைத்தான்... மீண்டும் மீண்டும் பிறந்து, அந்தப் பிறவித் தொடரிலிருந்து மீள முடியாது... தத்தளிக்கும் ஜீவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார். பெருங்கடலை நீந்திக் கட்ப்பதைப் போல, இந்தப் பிறவிக் கடலையும்... கர்ம வினைகளை, ஒவ்வொன்றாக அனுபவித்துத்தான் கடந்து போக வேண்டும். அதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜீவனுக்குள்ளே இருந்து அருள் செய்யும்... அந்த இறைவன் என்ற பேரருள் கருணை... கடலில் நீந்தித் தத்தளிக்கும் ஜீவனின் பிரார்த்தனைக்கு இரங்கி... ஒரு ஓடமாக வந்து காப்பதைப் போல, இந்தப் பிறவிப் பெருங்கடலில் தத்தளித்துத் தவிக்கும்... ஜீவனின் பிரார்த்தனைக்கும் இரங்கி... இறைவன், இந்தப் பிறவிப் பெருங்கடலில் இருந்து ஜீவனை மீட்டருள்கிறார்.

பிறவியைக் கடந்து போகும் போது எதிர்கொள்ளும் துன்பங்களையும்... அதிலிருந்து மீள்வதற்கான நுட்பத்தையும்... இதை விட எளிதாக எவரால்தான் விளக்கிட முடியும்... !

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...