(கடந்த 25.05.2004 அன்று... ஸாயீ பாவின் அருளால்... அடியேனின் மனதில் உருவான இந்த கீதம்... ஸாயீ மஹானின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.)
பாபா நீயே துணை எனக்கு - இந்த
சாகரத்தை நான் கடப்பதற்கு
எத்தனை காலம் சுழல் நடுவில் - நான்
சுழன்றே இருப்பது நடுக்கடலில்.
அலைகடல் நடுவே வந்து விடு
எனக்குன் கையைத் தந்து விடு
இங்கொரு பிறவி இனி வேண்டேன்
இனி பிறவா வரத்தைத் தந்துவிடு.
பிறவி பெரும் சுமையானதிங்கு - அதை
சுமந்தே வளைந்தன தோள்கள் ரெண்டு
பிறவிகள் தோறும் வினைகள் ரெண்டு - அதன்
விளைவால் மீண்டும் பிறவி இங்கு.
வினைகளை நீயே அளித்துவிடு
சுமைகளை நீயே இறக்கி விடு
மோக வலையை அறுத்து விடு
சுகமாய் வானில் பறக்கவிடு.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment