Monday, March 30, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 112. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியலின் (Nameology) சூட்சுமம். - பகுதி 5.



முன் தொடர்ச்சி...

... பாரதத்தின் புதல்வர்கள் அனைவ்ரும் 'சப்தரிஷிகளின் கோத்திரத்தில் பிறந்தவர்களாகிறோம்...

தொடர்கிறது...

கோத்திரம்... குலம்... குடி வழியாக 'பெயரிடுதலில்' இருந்த முக்கியத்தை அன்றைய சமூகம் உணர்ந்திருந்தது. அதற்கான வழிமுறைகளையும் வகுத்திருந்தது.

'சிவ குலத்தில்' பிறந்திருப்பவர்கள், திருநீற்றை அணிபவராக இருப்பார்கள். அவர்களது குடும்பப் பெயர்கள் பெரும்பாலும், ஆண்களானால், 'சிவபெருமானார்... விநாயகர்... முருகன்...' என்பதை அடிப்படையாகக் கொண்டு... அவர்களுக்கு வழங்கும் எண்ணற்ற பெயர்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள். பெண்களானால், தாயார் பராசக்தியை முன்னிட்டும்... தாயாரின் எண்ணற்ற வடிவங்களின் பெயர்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள்.

அது போல, 'விஷ்ணு குலத்தில்' பிறந்திருப்பவர்கள், 'திருமண் காப்பிடுபவர்களாகவும்'... 'திருச் சூரணம்' சாற்றிக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குடும்பப் பெயர்கள் பெரும்பாலும், ஆண்களானால், 'பகவான் நாரயணரது' திருநாமங்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள். பெண்களானால், 'தாயார் லக்ஷ்மீ தேவியரின்' திரு நாமங்களில் ஒன்றைத் தாங்கி இருப்பார்கள்.

இந்த 'இரண்டு குலங்களும்', அன்றைய சமூகத்தின் வழக்கத்திலிருந்த ஒவ்வொரு 'வர்ணங்களிலும்' ( அந்தணர் ; ஷத்திரியர் ; வைசியர் ; சூத்திரர்) விரவி இருந்தது. அது மட்டுமல்ல... அந்தந்த வர்ணங்களின் உட்பிரிவுகளுக்குள்ளும் ( வடகலை, தென்கலை மற்றும் இதர வர்ணங்களின் ஜாதி உட்பிரிவுகள்) விரவி இருந்தது.

கோத்திரங்களாகவும்... குடிகளாகவும்... வர்ணங்களாகவும்... பிரிந்து நின்ற ஒட்டுமொத்த சமூகத்தை... இந்த 'இரண்டு குல பிரிவுகளில்' கொண்டு வந்து இணைத்ததுதான்... நம் முன்னோர்களின் 'அனுபவமும்... புத்திசாலித்தனமும்'.

இந்த நடைமுறையால்... 'திருமணம் என்ற இணைப்பு' வெகு எளிதாக நடந்தேறியது. அது எவ்வாறென்றால், 'ஒரே கோத்திரத்திலும்... ஒரே குலத்திலும்... ஒரே குடியிலும்...' ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்வதில்லை... என்ற ஒரு வரை முறையை வகுத்திருந்தார்கள்.

ஆதாலால், எந்த 'ஒரு உட்பிரிவைச் சேர்ந்தவர்களும்'... ஒரே குலமான... 'சிவ குலத்திற்குள்ளோ' அல்லது 'விஷ்ணு குலத்திற்குள்ளோ'... ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள்.எனவே, சிவகுலத்தில் பிறந்தவர்கள்... விஷ்ணு குலத்தில் பிறந்தவர்களை மணந்தார்கள். இவ்விதத்தில் ''ஹரியும்... சிவனும்...' ஒன்றாகிப் போனார்கள்.

இந்த இணைப்பிற்காக... அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும்... 'பெயரியலில்' ஒரு சூட்சுமத்தைக் கையாண்டார்கள்... அது என்னவெனில், 'சிவகுலத்தில்' பிறக்கும் ஆணுக்கு... 'பரமேஸ்வரன்' என்று பெயரிட்டால், பெண்ணுக்கு... 'மகாலட்சுமி' என்ற 'விஷ்ணு குலப்' பெயரைச் சூட்டினார்கள். அதுபோல, 'விஷ்ணு குலத்தில்' பிறக்கும் ஆணுக்கு... 'ஸ்ரீநிவாஸன்' என்று பெயரிட்டால், பெண்ணுக்கு 'மகேஸ்வரி' என்ற 'சிவ குலத்துப்' பெயரைச் சூட்டினார்கள்.

காலக் கிரமத்தில்... 'சிவ குலத்தில்' பிறந்த 'பரமேஸ்வரன்', 'விஷ்ணு குலத்தில்' பிறந்த 'மகேஸ்வரியை' மணந்தான். அது போல... 'விஷ்ணு குலத்தில்' பிறந்த 'ஸ்ரீநிவாஸன்', 'சிவ குலத்தில்' பிறந்த 'மகாலட்சுமியை' மணந்தான். இவ்வாறாக... 'பெயரியல் பொருத்தமே'... ஒவ்வொரு வர்ணத்தின் உட்பிரிவுத் திருமணங்களிலும் கோலோச்சியது.

காலத்தின் மாற்றங்கள்... இந்த 'பாரம்பரிய வழி முறையையும்' விட்டு வைக்கவில்லை. கோத்திரங்களிலும்... குலத்திலும்... குடியிலும்... 'கலப்பு' ஏற்பட்டதால், 'வர்ணங்களின் பகுப்புகள்' மறக்கப் பட்டது. அதன் விளைவாக... 'குடிகளின் உட்பிரிவுகளை' வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கமும்... அதனால்... காலக் கிரமத்தில்... 'குடிகளுக்கு ஆதாரமான 'குல தெய்வ வழிபாடும்' அரிதாக்கிவிட்டது மட்டுமல்ல... வெகுவானவர்கள் 'குல தெய்வம்' எது என்பதைக் கூட அறியாத நிலையில் தத்தளிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சூழலில்... இந்தப் 'பாரம்பரிய பெயரிடலை' மீட்டெடுப்பது என்பது ஒரு சவாலான முயற்சிதான். அதனால், இருக்கும் சூழலைக் கொண்டு அந்த முறையை எவ்வாறு கையாளலாம் என்பதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...