Friday, May 31, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 2 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 2 : 


'கடுகைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்தக் குறள்' என்பதைச் சற்று மாற்றி... 'அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்தக் குறள்...' என்று அமைத்தார் ஔவையார்.

கண்ணுக்குத் தெரியும் கடுகை விட, கண்ணுக்குத் தெரியாத அணுவைத் துளையிட்டு, அந்தத் துளையின் வழியாக ஏழ் கடலையும் புகுத்தக் கூடிய அளவில், செறிவான பொருள்... உண்மையைக் கொண்டதாக... திருக்குறளுக்கு புகழாரம் சூட்டியிருப்பார் ஔவையார்.

ஏழே சொற்களைக் கொண்டமைந்த இந்த ஈரடி வெண்பா தரும் எண்ணற்ற சிந்தனைகள் அளவிடமுடியாதவைதான்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

என்ற குறள் உணர்த்தும் பொதுவான கருத்து... தீயின் ஜுவாலை சுடுவதை விட, ஒருவரின் நாவிலிருந்து வெளிவரும் கடினமான சொற்கள் கேட்பவரை காயப்படுத்தி... அதை என்றும் ஆறாத காயமாக... நினைவில் நிறுத்தி வைக்கும் என்பதுதான்.

இந்தக் குறளிளமைந்த ஒரு சொல்... இந்த மையக் கருத்தின் ஆழத்தை நமக்கு உணர்த்தும்.  அது 'உள்' என்ற சொல்தான். அதை நீக்கி விட்டு...

தீயினாற் சுட்டபுண் ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

... எந்று... இந்தக் குறளைக் கேட்க நேர்ந்தாலும், பெருமளவில் பொருளில் மாறுபாடு ஏற்படாது.

பின்... எதற்காக இந்த 'உள்' என்றசொல்லை... இந்த 'வார்த்தை சித்தர்' பயன்படுத்துகிறார்...!

தீயின் ஜுவாலை உடலைத் தாகும் போது அது சுலபத்தில் ஆறாத புண்ணாகிக் கடும் துன்பத்தைத் தருகிறது. சிறிது சிறிதாக அந்தப் புண் ஆறி, உடலின் 'உள்' புறத்தில் முழு நிவாரணத்தையும்... உடலின் வெளிப்பகுதியில், என்றும் நீங்காத வடுவாகவும்... இருக்கும். இதையே... 'தீயினாற் சுட்டபுண் 'உள்'ளாறும்...' என்ற சொற்களின் மூலம் அளிக்கிறார்.

அதுவே... வாயிலிருந்து வரும் சுடு சொற்கள் அதை எதிர்கொள்ளும் மனிதரின் உடலில் எந்தக் காயத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவரின் மனதின் 'உள்ளே' என்றும் ஆறாத புண்ணாகவும்... அதன் நினைவுகள் என்றும் நீங்காத வடுவாகவும் தொடரும் என்பதையே...'...ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்று பூரணம் செய்கிறார்.

இந்த...'உள்'... என்ற ஒரு சொல்லைக் கொண்டு... தீயினால் ஏற்படும் தாக்கம் உள்ளே ஆறிவிடும் ஆனால் வெளியே என்றும் நீங்காத வடுவாகத் தோன்றும்... என்பதையும், நாவினால் சுடும் சொற்கள் வெளியே ஆறிவிடும் போலத் தோன்றினாலும், ஆனால் மனத்துள்ளே என்றும் நீங்காத வடுவாக நீடிக்கும்... என்று பகரும் ஞானம்தான் என்னே...!

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...